அதிமுக தலைமைக் கழகம் ஆனது டிஎன்பிஎஸ்சி: ஸ்டாலின் சாடல்

அதிமுக தலைமைக் கழகம் ஆனது டிஎன்பிஎஸ்சி: ஸ்டாலின் சாடல்

Published on

ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் 11 உறுப்பினர்களை நியமித்து டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தை அதிமுகவின் தலைமைக் கழகமாக தமிழக அரசு மாற்றியுள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்துள்ள நிலைத்தகவலில், "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் 11 உறுப்பினர்களை நியமித்து அதிமுக அரசு அந்த தேர்வாணையத்தையும் அதிமுகவின் தலைமைக் கழகமாக்கியிருக்கிறது.

அதிமுக அரசில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் ஆறு பேர் உறுப்பினர்களாகியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வருபவர்.

இது தவிர அதிமுக அரசின் கொள்கை பரப்புச் செயலாளர் இல்லாத குறையாத் தீர்த்து வைத்து இந்த மாத இறுதியில் ஓய்வு பெற இருக்கும் அரசு செயலாளர் ராஜாராமன் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பல ஆயிரம் கோடி ரூபாய் மின்சாரம் வாங்கியதில் நஷ்டத்தை ஏற்படுத்திய மின்சார வாரியத்தில் தலைமைப் பொறியாளராக இருந்தவர் ஒருவர் உறுப்பினராகியிருக்கிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கு, மின்கொள்முதலில் ஊழல் செய்த மின்சார வாரியம், அதிமுக அரசுக்கு விளம்பரம் செய்து கொண்டிருந்த துறை- இப்படி முழுக்க முழுக்க அதிமுகவின் தலைமைக் கழகத்திற்கு போஸ்டிங் போடுவது போல் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த நியமனங்களை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்கைப் பார்த்து வந்த வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணனை சர்வீஸ் கமிஷன் தலைவராக நியமித்தார் ஜெயலலிதா. இப்போது அவருக்கு ஜூனியராக இருந்த வழக்கறிஞரையும் உறுப்பினராக நியமித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்தவரை பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவராக நியமித்ததை "State of Punjab vs Salil Sabhlok and others" என்ற வழக்கில் உச்சநீதிமன்றமே ரத்து செய்ததை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஆனால் இப்படியொரு உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக இப்போது தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் அதிமுக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதுவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியமனங்களை செய்யப் போகிறோம் என்று அரசு தேர்வாணைய தலைவராக இருக்கும் டாக்டர் அருள்மொழி 2016-17 ஆம் ஆண்டிற்கான "தேர்வு அட்டவணையை" வெளியிட்ட உடன் இந்த 11 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் வாரியத்தை அதிமுக அரசியல் மயமாக்கும் முயற்சி இது. எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கழக அரசு அமைந்ததும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசியல்மயமாவது உடனடியாக தடுக்கப்படும். அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மீதான நம்பகத்தன்மையை மீட்பதற்கும், தேர்வு முறைகளில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in