Published : 14 Feb 2014 01:25 PM
Last Updated : 14 Feb 2014 01:25 PM

தமிழக பட்ஜெட் 2014-15: சத்துணவு ஊழியர்கள், விவசாயிகள் கருத்து

இந்த பட்ஜெட்டில் எங்களுக்கான அடிப்படை எதிர்பார்ப்புகளை தமிழக அரசு நிறைவேற்றாதது ஏமாற்றமளிக்கிறது என்று தமிழக சத்துணவு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மானியக் கோரிக்கையின் போதாவது எங்கள் கோரிக்கைகளை பேசி இந்த அரசு நிறைவேற்றித் தரவேண்டும்!’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறது தமிழக சத்துணவு ஊழியர்கள் சங்கம். இதுகுறித்து அமைப்பின் மாநிலத் தலைவர் பழனிச்சாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:

“சட்டமன்றத்தேர்தலின்போது எங்கள் அடிப்படை கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித்தருவதாக அ.தி.மு.க பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. முதல்வர் ஜெயலலிதா அது குறித்து எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதமும் எழுதினார். வரையறுக்கப்பட்ட ஊதியம் என்ற முறையில் குறைந்தபட்சம் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் அளிப்பது, முழுநேர ஊழியர்களுக்கான சட்டரீதியான குடும்ப ஓய்வூதியம், 30 ஆயிரம் காலியிடங்கள் நிரப்புவது போன்றவை அதில் அடங்கும். ஆனால் அவை எதுவும் கடந்த 2ஆண்டு பட்ஜெட்டுகளிலும் கண்டுகொள்ளப்படவில்லை.

இந்த முறையாவது ஏதாவது அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்த்தோம். எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தையே அளிக்கிறது’’ என்றார்.

விவசாயிகள்..

பயிர் பாதுகாப்புக்காக 242.54 கோடி அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பயிர் காப்பீடு என்பது காலநிலை சார்ந்த பயிர் காப்பீடு என்றும், மண்டல வாரியான இழப்பீடு தற்போது கிராம வாரியான இழப்பீடாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வன விலங்குகளாலும், சூறாவளிக் காற்றாலும் ஏற்படும் இழப்புகளுக்கு இந்த காப்பீடு பொருந்தாது என்பதால் இது

விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. 2014-15 ம் ஆண்டில் கூட்டுறவு அமைப்புகளுக்கான பயிர்க் கடன் இலக்கு ரூ.5 ஆயிரம் கோடி என உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. பயிர்க்கடனை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான சலுகையை அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் நீண்ட நாள் கோரிக்கைகள் பட்ஜெட்டில் நிறைவேற்றப்படவில்லை.

மாற்றுத்திறனாளிகள்..

இலவச கைபேசி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட தங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்றப்படவில்லை என மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய பார்வையற்றோர் இணையத்தின் திட்ட இயக்குநர் மனோகரன் கூறுகையில், மாற்றுத்திறனாளிக்கு கொடுக்கப்படும் வேலைவாய்ப்புகள் தொடர்பாக ஜன.8க்குள் மாநில அரசுகள் என்ன செய்துள்ளது எனவும், 3 சதவீத வேலைவாய்ப்பு கொடுக்கப்பட வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை நாங்களும் மாநில அரசுக்கு ஏராளமான முறை தெரிவித்துள்ளோம். ஆனாலும் கூட மாநில அரசு இதை செயல்படுத்தவில்லை. இந்த வேலைவாய்ப்பு குறித்து இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் வரவில்லை. பத்தாம் வகுப்புக்கு குறைவாக படித்தவர்களுக்கு தகுதிகளுக்கேற்ற வேலைவாய்ப்பு

கள் கேட்டிருந்தோம். அத்துடன் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை எதிர்பார்த்தோம். உதவித்தொகை உயர்த்தப்பட்டாலும், எங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் இதில் நிறைவேற்றப்படவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x