இலங்கை பிரதமர் திருப்பதி வருகையைக் கண்டித்து திருத்தணியில் மதிமுகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
இலங்கை பிரதமர் திருப்பதி வருகையைக் கண்டித்து திருத்தணியில் மதிமுகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்து, தமிழக மீனவர்கள் 600 பேரை சுட்டுப் படுகொலை செய்த, 2000-க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களை இடித்து தரைமட்டமாக்கிய, அப்பாவி தமிழக மீனவர்கள் 5 பேரின் மீது பொய் வழக்கு போட்டு தூக்கு தண்டனை விதித்து மரணக்கொட்டடையில் அடைத்து வைத்துள்ள சிங்கள பேரினவாத அரசின் அதிபர் ராஜபக்சவுடைய இலங்கை பிரதமர் ஜெயரத்னா திருப்பதி வருகையைக் கண்டித்து கழகத்தின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் திருத்தணி நகரில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது கருப்புக்கொடியுடன் திருப்பதி நோக்கி புறப்பட்ட 250-க்கும் மேற்பட்ட கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டச்செயலாளர்கள் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், பாலவாக்கம் சோமு, வடசென்னை ஜீவன், தென்சென்னை வேளச்சேரி மணிமாறன் மற்றும் முராத் புஹாரி பூவை மு.பாபு, அட்கோமணி, அந்ததிதாஸ், கோதண்டம், பூவை து.கந்தன், தாயகம் தங்கதுரை, காந்தி உள்ளிட்ட கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
