Published : 01 Mar 2017 09:02 AM
Last Updated : 01 Mar 2017 09:02 AM

மதுரவாயல் திட்டம், 2-ம் கட்ட மெட்ரோ, ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு கோரி மத்திய அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

தமிழக வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, டெல்லியில் நேற்று மூன்று மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார். தமிழக வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லி வந்த தமிழக முதல்வர் பழனிசாமி, மறுநாள் மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது 106 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளித்தார். இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, எம்.வெங்கய்ய நாயுடு, ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை சந்தித்தார்.

முதலாவதாக கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த முதல்வர் பழனிசாமி பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சென்னை மதுரவாயல்-துறை முகம் பறக்கும் சாலை திட்டம், மத்திய-மாநில அரசுகளால் விரைவில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 700 கி.மீ. நீள சாலைகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த கோரிக்கை வைத்தேன். சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுற்றுப்புறச் சாலைகள் அமைத்து தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள் ளேன். இவற்றை பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்” என்றார்.

நிதின் கட்கரி உடனான சந்திப்பில் துறையின் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண னும் பங்கேற்றார். அப்போது தமிழக மீனவர் பிரச்சினை, குளச்சல் துறைமுக திட்டம், மதுரை உள்வட்ட சாலை, கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்துவது ஆகியவை குறித் தும் ஆலோசிக்கப்பட்டது.

அடுத்து, மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை பழனிசாமி சந்தித்தார். இது குறித்து வெங்கய்ய நாயுடு கூறும்போது, “சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சுரங்கப் பாதை அமைக்க வேண்டி உள்ளது.

இதற்காக நிலம் பெறுவ தற்கு ரயில்வே துறையிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. சென்னை பெருவெள்ளத்தின் போது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தேன். அப்போது அவர் சென்னையில் மீண்டும் வெள்ளம் வராமல் தடுக்க நீர்வழித் தடங்களில் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட வேண்டி யுள்ளது என்றார். இதை தற்போ தைய முதல்வரிடம் நினைவூட்டி னேன். அவரும் ஆவன செய்வ தாகக் கூறினார். தமிழகத்தின் 6 ஸ்மார்ட் நகரப் பணிகளுக்கு முதன்மை அதிகாரிகளை தமிழக அரசு நியமிக்க வேண்டும். இந்த நியமனம் முடிந்தவுடன் பணிக்கானத் தொகையை மத்திய அரசு அளிக்கத் தொடங்கி விடும். அம்ருத் திட்ட நகரங்கள் குறித்து தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை பரிசீலிக்கப்படும். தமிழக அரசு கேபிள் டிவியை டிஜிட்டல் தொழில் நுட்ப மயமாக்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகி றோம். மத்திய அரசை பொருத்த வரை தமிழகத்துக்கு அனைத்து வகை உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது” என்றார்.

இறுதியாக மத்திய சட்டம், நீதி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை பழனிசாமி சந்தித்தார். அப்போது, ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவும் தமிழகத்தில் ‘பாரத்நெட்’ திட்டத்தை தமிழக அரசு மூலம் செயல்படுத்தவும் கோரிக்கை விடுத்தார்.

இந்த மூன்று சந்திப்புகளிலும் சம்பந்தப்பட்ட துறைகளின் தமிழக அமைச்சர்களான ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் அந்தந்த துறைகளின் மத்திய, மாநில அரசு அதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x