Last Updated : 02 Dec, 2013 12:00 AM

 

Published : 02 Dec 2013 12:00 AM
Last Updated : 02 Dec 2013 12:00 AM

கோமாரி நோய் தாக்குதல் எதிரொலி: மட்டன் விலை கடும் வீழ்ச்சி

கோமாரி நோய் பாதிப்பால் ஆட்டிறைச்சி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோவுக்கு ரூ.40 வரை குறைந்திருக்கிறது.

தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கோமாரி நோய் தாக்கி ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள் இறந்தன. கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் கோமாரி நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அந்த மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் ஆடுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

தடுப்பூசி போடாத ஆடு, மாடுகளைத்தான் கோமாரி நோய் தாக்குவதாகவும் இதனால், கிராமப்பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.

20 ஆயிரம் ஆடுகள் இறப்பு

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத் தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல் கூறும்போது, ‘‘தமிழ்நாட்டில் கோமாரி நோய் தாக்கி 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் இறந்துள்ளன’’ என்றார்.

இதுகுறித்து கால்நடைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் கோமாரி தாக்குதல் அவ்வளவாக இல்லை. மழைக்காலத்தில் மனிதனுக்கு வருவதைப் போல ஆடுகளுக்கும் ஜலதோஷம் போன்ற பாதிப்புகள் வரத்தான் செய்யும். ஆந்த்ராக்ஸ் மற்றும் வேறு காரணமாக ஆடுகள் இறந்திருக்கலாம். விழுப்புரம் மாவட்டத்தில் ஆடுகளுக்கு ஆந்த்ராக்ஸ் பாதிப்பு இருப்பதாக தகவல் கிடைத்ததும் உடனே நடவடிக்கை எடுத்தோம். அதனால், ஆந்த்ராக்ஸ் நோய் இப்போது கட்டுக்குள் உள்ளது’’ என்றார்.

கோமாரி நோய் அச்சம் காரணமாக ஆட்டிறைச்சி வாங்குவதை மக்கள் தவிர்க்கின்றனர். இதனால், ஆட்டிறைச்சி விலை கிலோவுக்கு ரூ.40 வரை குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சைதாப்பேட்டை, மேடவாக்கத்தில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.440-க்கு விற்றது. முகப்பேர் மேற்கு, அண்ணாநகர், கொடுங்கையூர், வியாசர்பாடி, மகாகவி பாரதி நகர் ஆகிய இடங்களில் கிலோ ரூ.460-க்கும், உள்ளகரம், புரசைவாக்கம் டானா தெருவில் கிலோ ரூ.480-க்கும் விற்றது. புதுப்பேட்டையில் ரூ.400-க்குத்தான் விற்பனையானது.

விற்பனை குறைவு

முகப்பேர் மேற்கில் மட்டன் கடை நடத்தும் அல்தாஜ் கூறுகையில், ‘‘சென்னைக்கு 99 சதவீதம் ஆடுகள் கர்நாடகம், ஆந்திராவில் இருந்துதான் வருகின்றன. ஆடுகளை கோமாரி நோய் தாக்குவதால், ஆட்டிறைச்சி வாங்குவதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 30 சதவீதம் ஆட்டிறைச்சி விற்பனை குறைந்துள்ளது’’ என்றார்.

அண்ணாநகர் 3-வது அவென்யூ இறைச்சிக் கடை ஊழியர் உசேன் கூறும்போது, ‘‘விடுமுறை நாட்களில் 70 முதல் 90 கிலோ வரை ஆட்டிறைச்சி விற்கும். ஞாயிற்றுக்கிழமை 40 கிலோதான் விற்றது’’ என்றார்.

ஆட்டிறைச்சி மட்டுமின்றி, கோழி, மீன் உள்ளிட்ட அசைவ அயிட்டங்களின் விலையும் குறைந்துள்ளது. சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதும் இதற்கு ஒரு காரணமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x