

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (புதன்கிழமை) கடைசி நாள். இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 4,963 காலியிடங்களை நிரப்புவதற்காக டிசம்பர் 21-ம் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது கடந்த அக்டோபர் 14-ம் தேதி தொடங்கியது.
குரூப்-4 தேர்வு எழுதுவதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி. அதனால், லட்சக்கணக்கான பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (புதன்கிழமை) கடைசி நாள். இன்று நள்ளிரவு 11.59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம், விண்ணப்பக் கட்டணத்தை நெட் பேங்கிங் அல்லது கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.
அவ்வாறு செலுத்த இயலாதவர்கள் ஆன்லைன் விண்ணப்ப செலானை தங்கள் விருப்பப்படி தபால் அலுவலகத்திலோ, இந்தியன் வங்கிக் கிளையிலோ வரும் 14-ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) செலுத்திவிட வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப் பிறகு, ஏற்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். தேர்வுக்கான நுழைவுச் சீட்டும் (ஹால் டிக்கெட்) ஆன்லைன் மூலமாகவே வழங்கப்படும்.