Published : 24 Apr 2017 11:34 AM
Last Updated : 24 Apr 2017 11:34 AM
எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கில் 2 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்ததுடன் அவர்களை விடுவித்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விஜயனின் உறவினரான பானு உள்ளிட்ட 7 பேருக்கு கடந்த 2016 ஜூலை மாதம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில், ஏழு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதில், பானுமதி, எம்.கார்த்தி ஆகியோரை விடுவித்தும், மற்ற ஐந்து பேரின் தண்டனையை உறுதி செய்தும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
வழக்கு பின்னணி:
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மனைவி ஜானகியின் தம்பி நாராயணன். இவருக்கு 6 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த மகள்களில் சுதா என்பவரை எம்ஜிஆர் தனது வளர்ப்பு மகளாக தத்தெடுத்துக் கொண்டார். இந்த சுதாவின் கணவர்தான் விஜயன் என்ற விஜயகுமார்.
எம்ஜிஆர் மறைவிற்குப்பிறகு அவருக்குச் சொந்தமான ராமாவரம் தோட்டம் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விஜயனும், சுதாவும் நிர்வகித்து வந்தனர். இந்த சொத்துகளை நிர்வகிப்பதில் விஜயனுக்கும், அவரது மனைவி சுதாவின் தங்கைகள் குடும்பத்தாருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த 2008 ஜூன் 4-ம் தேதி இரவு காரில் கோட்டூர்புரம் அருகே சென்று கொண்டிருந்த விஜயனை, ஒரு கும்பல் வழிமறித்து இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தது. அபிராமபுரம் போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை யில், விஜயனைக் கொலை செய்தது சுதாவின் தங்கைகளில் ஒருவரான பானு என்பதும், அவர் போலீஸ்காரரான கருணா என்பவரின் உதவியுடன் கூலிப்படையினர் மூலமாக விஜயனை தீர்த்துக்கட்டியதும் அம்பலமானது.
பானு, எம்ஜிஆர் நிறுவிய ஒரு பள்ளிக்கு நிர்வாகியாக இருந்துள்ளார் என்றும், இந்த பள்ளிக்கூடத்தை தனது பெயரில் எழுதி வைக்க பானு விடுத்த கோரிக்கையை விஜயன் ஏற்க மறுத்ததாலேயே இந்தக் கொலை நடந்துள்ளது என்பதையும் போலீஸார் தங்களின் விசாரணையில் ஊர்ஜிதப்படுத்தினர்.
இதையடுத்து, இந்த வழக்கில் பானு முதல் குற்றவாளியாகவும், பானுவிற்கு உதவிய போலீஸ்காரர் கருணா 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். தவிர விஜயனைக் கொலை செய்த சுரேஷ், ஆர்.கார்த்திக், தினேஷ்குமார், சாலமன், எம்.கார்த்திக், பள்ளி ஆசிரியை புவனா உள்ளிட்ட 8 பேர் மீதும் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இதில் ஆசிரியை புவனா வெளிநாட்டிற்கு தப்பியதால், அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, எஞ்சிய 7 பேர் மீதான வழக்கு மட்டும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றவாளிகள் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) மேல்முறையீட்டு வழக்கில், பானுமதி, எம்.கார்த்தி ஆகியோரை விடுவித்தும், மற்ற ஐந்து பேரின் தண்டனையை உறுதி செய்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT