Published : 08 Jul 2016 04:36 PM
Last Updated : 08 Jul 2016 04:36 PM

மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்துக: வாசன்

தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்தும் தீவிர நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் கடலோர மாவட்டப் பகுதிகளில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது ஆழ்கடலில் மீன்பிடிப்பது வழக்கமான ஒன்று. அவ்வாறு மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், சிறைப்பிடித்துச் செல்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.

ஆனால், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாக்கி கொண்டு இருப்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்வதில்லை. இதுவரை இலங்கை சிறையில் 57 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழக மீனவர்களின் படகுகளும் இலங்கையின் வசம் உள்ளது.

இந்நிலையில் 06.07.2016 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து 550 க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். வியாழக்கிழமை அதிகாலை மீனவர்கள் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி, 2 படகுகளை பறிமுதல் செய்து, 11 மீனவர்களை சிறைபிடித்துச் சென்றனர்.

அதே போல நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்களை கைது செய்து, அவர்கள் சென்ற ஒரு படகினையும் பறிமுதல் செய்தனர். இது இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலையும், மனிதாபிமானமற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

மேலும், இலங்கை அரசும் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதை மத்திய அரசு இனி ஒருபோதும் பொறுத்துக்கொள்ளக்கூடாது. எனவே, மத்திய அரசு வெளியுறவுத்துறையின் மூலம் தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டு அந்நாட்டின் கடற்படை இனி தமிழக மீனவர்களை கைது செய்யவோ, படகுகளை பறிமுதல் செய்யவோ கூடாது என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்தும் தீவிர நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். மேலும் இலங்கை சிறையில் வாடுகின்ற தமிழகத்தைச் சேர்ந்த 73 மீனவர்களையும், அந்நாட்டின் வசம் உள்ள 130 க்கும் மேற்பட்ட படகுகளையும் மீட்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற்று, சுமூகத் தீர்வு எட்டப்படும் வரை தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் எந்த விதத்திலும் பிரச்சனைகள் வரக்கூடாது என்பதை இந்தியா இலங்கையோடு பேசி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்'' என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x