Published : 28 Mar 2014 12:00 AM
Last Updated : 28 Mar 2014 12:00 AM
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மனு நீதிச் சோழன் சிலையை அகற்ற வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இது தொடர்பாக சேலம் இந்திரா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.பிரவீணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனு நீதிச் சோழனின் மகன் சாலையில் தேரோட்டிச் சென்ற போது திடீரென சாலையின் குறுக்கே ஓடி வந்த ஒரு பசுவின் கன்று தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது. இந்நிலையில் பசுவின் துயரத்தை அறிந்த மனு நீதிச் சோழன் தன் சொந்த மகனையே தேரை ஏற்றிக் கொன்றான். இதனால் நீதியின் அடையாளமாகப் போற்றப்படும் மனு நீதிச் சோழனின் சிலை உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
பசுவின் கன்று திடீரென சாலையின் குறுக்கே ஓடி வந்து தேர் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. இதில் மனு நீதிச் சோழன் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை. பசுவின் கன்றை கொல்ல வேண்டும் என்ற எவ்வித நோக்கமும் அவனுக்கு இல்லை.
இந்நிலையில் ஒரு சிறுவனை கொடூரமாகக் கொன்ற மனு நீதிச் சோழனின் செயல் நீதிக்கு எதிரானது. மனு நீதிச் சோழனை நீதியின் அடையாளமாகக் கூற முடியாது. ஆகவே, உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மனு நீதிச் சோழன் சிலையை அகற்ற வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT