Published : 22 Jan 2014 12:00 AM
Last Updated : 22 Jan 2014 12:00 AM

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனத்துக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள பட்டியலை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் மீதான விசாரணையை மறு தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு தகுதியான வழக்கறிஞர்களையே பரிந்துரை செய்ய வேண்டும். நீதிபதிகள் நியமன முறை வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். எல்லா சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ள பட்டியலை திரும்பப் பெற வேண்டும் என அந்த மனுவில் அவர் கோரியுள்ளார். இந்த வழக்கில் மேலும் பலர் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் வி.தனபாலன், கே.கே.சசிதரன் ஆகியோர், நீதிபதிகள் நியமனத்துக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள பட்டியல் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்று கடந்த ஜனவரி 9-ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். எனினும் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் பின்னர் இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால், உயர் நீதிமன்றத்தில் அதன் விசாரணையை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் வி.தனபாலன், கே.கே.சசிதரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x