Published : 20 Mar 2017 06:20 PM
Last Updated : 20 Mar 2017 06:20 PM
மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்று நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.
சட்டப்பேரவை இன்று கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற்றது.
மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று ஸ்டாலின் பேசினார்.
அதற்குப் பதிலளித்த நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ''கடந்த 17-ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் மட்டத்தில் நடந்த கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன். அந்தக் கூட்டத்தில் பாரம்பரிய இடத்தில் மீனவர்கள் பாதுகாப்பாக மீன் பிடிக்க வலியுறுத்தப்பட்டது.
ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்க மத்திய அரசிடம் ரூ.1,640 கோடி கோரப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை வசம் உள்ள 128 படகுகளை நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தப்பட்டது.
இந்திய- இலங்கை மீனவர்களுக்கு இடையிலான 4 சுற்று பேச்சுவார்த்தையில் 95% உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT