

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட மோதல் வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் மகன் மற்றும் தம்பி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார். அப்போது டிடிவி தினகரன் தரப்பினருக்கும், ஓபிஎஸ் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து சரவணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், ஆர்.கே.நகர் போலீஸார் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் அவரது தம்பி ஓ.ராஜா உள்ளிட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக போலீஸார் பதில் மனு தாக்கல் செய்யவும், அது வரை அவர்கள் இருவரையும் கைது செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி எஸ்.பாஸ்கரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதை யடுத்து, ரவீந்திரநாத் குமார் மற்றும் ஓ.ராஜாவை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை ஏப்ரல் 17 வரை நீ்ட்டித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஓபிஎஸ் மகன் மற்றும் தம்பி ஆகிய இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.