Published : 02 Jun 2016 08:36 AM
Last Updated : 02 Jun 2016 08:36 AM

தேர்தலில் தோல்வியடைந்தாலும் மதிமுகவினர் உற்சாகத்துடன் உள்ளனர்: வைகோ தகவல்

தேர்தலில் தோல்வியை தழுவி யிருந்தாலும் மதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடனே இருக்கிறார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மதிமுக மாவட்டச் செயலாளர் கள், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள கட்சித் தலைமையகமான தாயகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:

வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு திமுகவும், அதிமுகவும் பணத்தை வாரி இறைத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளன. அவர்களின் பண பலத்துக்கு முன்பாக எங்கள் அணிக்கும் மக்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர். 2011 சட்டப்பேரவைத் தேர்தலை மதிமுக புறக்கணித்தது. இந்தத் தேர்தலில் எங்கள் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இதனால் மதிமுக தொண்டர்கள் யாரும் துவண்டுவிடவில்லை.

தேர்தல் ஆணையம் அதிகாரம் அற்ற அமைப்பாக உள்ளது. பணப்பட்டுவாடா செய்யும் வேட் பாளர்களை தகுதி நீக்கம் செய் யவோ, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை பறிக் கவோ தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. இதனால், பணப்பட்டுவாடாவை துணிந்து செய்கின்றனர். இது தொடர்பாக வழக்கு தொடுத்தாலும், உடனே நீதி கிடைக்காது. 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு அப்புறம்தான் முடிவு கிடைக்கும்.

தேர்தலில் மதிமுக தோல்வி யுற்ற போதிலும் தொண்டர்கள் உற்சாகத்துடனே இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் அரசியல்வாதிகள் என்பதைத் தாண்டி போராளிகளாக வலம் வருபவர்கள். மன உறுதிமிக்க அவர்கள் அநீதிகளை எதிர்க்கும் எண்ணம் கொண்டவர்கள்.

இவ்வாறு வைகோ கூறினார்.

தீர்மானங்கள்

மதிமுக மாவட்டச் செய லாளர்கள் கூட்டம், அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் நேற்று நடந்தது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன் உள்ளிடோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தேர்தலின்போது பெரிய அளவில் பணப்பட்டுவாடா நடந்தது. இது தொடர்பாக வைகோ புகார் அளித்திருந்தார். ஆனால், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தேமுதிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக ஆகியவை இணைந்து செயல்படும்.

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளிடம் விவசாயிகள் பெற்ற கடனையும் தமிழக அரசே ஏற்க வேண்டும். டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை மதியம் 12 முதல் மாலை 5 மணி என்று நிர்ணயம் செய்ய வேண்டும். மருத்துவப் படிப்புக்கு அடுத்த ஆண்டும் நுழைவுத் தேர்வு கூடாது.

ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். பெட்ரோல். டீசல் , சேவை வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x