Published : 09 Sep 2016 08:57 AM
Last Updated : 09 Sep 2016 08:57 AM

தங்க முதலீடு அதிகரிப்பால் விலை உயர்வு: ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்தை நெருங்கியது

சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு அதிகரிப்பதாலும், உள்ளூரில் தேவை அதிகரிப் பதாலும், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் தங்கம் விலை நேற்று ரூ.56 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.23,912-க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு, தேவை அதிகரிப்பு ஆகியவற்றால், விலை உயர்வும் தொடர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக, கடந்த 6 மாதங்களில் மட்டுமே தங்கத்தில் முதலீடு 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், கடந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. பின்னர், செப்டம்பர் முதல் வாரத்தில் தங்கம் விலை கணிசமாக குறைந்தது. தற்போது, கடந்த 2 நாட்களாக மீண்டும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது.

சென்னையில் நேற்று முன் தினம் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2,982-க்கும், ஒரு பவுன் ரூ.23,856-க்கும் விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.7 என பவுனுக்கு ரூ.56 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.2,989-க்கும், ஒரு பவுன் ரூ.23,912-க்கும் விற்பனையானது.

விலை மேலும் உயரும்

சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார், ‘தி இந்து’விடம் கூறியபோது, ‘‘சர்வதேச அளவில் நிதி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்வதைவிட, தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கிறது. இதனால், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து, சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரிக்கிறது. உள்ளூரில் தேவை அதிகரிப்பதாலும், தங்கம் விலை தொடர்ந்து உயர்கிறது. குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் விலை ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு, சற்று குறைந்தது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. அடுத்த சில வாரங்களுக்கு தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x