Published : 20 Apr 2017 08:27 AM
Last Updated : 20 Apr 2017 08:27 AM
தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழ்நிலையால் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
ஆளும் கட்சியான அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினையால் தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் வன்முறை சம்பவங்கள் ஏற்படக்கூடும் என்று உளவுப்பிரிவு போலீஸார் எச்சரித்தனர். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அனைத்து பஸ் நிலையங்கள், முக்கிய கடை வீதிகள், கட்சி அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.
சென்னையில்...
அதிமுக உட்கட்சி ஆலோசனை கூட்டங்கள் சென்னையிலேயே நடப்பதால் சென்னை முழுவதும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரிகளும், காவலர்களும் இன்னும் சில நாட்களுக்கு காலை 6 மணிக்கு பணிக்கு வந்துவிட வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் கரன் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். விடுப்பில் சென்ற காவலர்கள் உடனே பணிக்கு திரும்பவும் உத்தரவிடப்பட்டது. சென்னை முழுவதும் 20 ஆயிரம் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சென்னை முழுவதும் தீவிர வாகன சோதனை, லாட்ஜ், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீடு ஆகியவற்றுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT