

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்க எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், ''61 நாள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 17-ந் தேதி மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் ஒரு இயந்திர மீன்பிடி படகில் தங்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக்ஜல சந்திக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் 18-ந் தேதி அதிகாலை கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கையின் கரைநகருக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது தொடர்பாகவும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்தும் எங்கள் தலைவர் ஜெயலலிதா தங்களுக்கு பல முறை கடிதங்கள் எழுதியிருந்ததை தாங்கள் அறிவீர்கள்.
தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவதும் சிறைப்பிடிக்கப்படுவதும் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழா வண்ணம் தடுக்க ராஜாங்க ரீதியில் உறுதியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் ஆதரவுடன் நடைமுறை சாத்தியமான தீர்வு காண எனது தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது. தமிழக மீனவர்கள் இதுபோன்று சிறைபிடிக்கப்படுவதை தவிர்க்கவும், மீனவர்களை விடுவித்து அவர்களின் மீன்பிடி படகுகளை பயன்படுத்தக்கூடிய நிலையில் மீட்கவும் இலங்கை அரசு நிர்வாகத்தின் உயர் அதிகார நிலையில் தலையிட வேண்டியது மிகவும் அவசர அவசியமாகும்'' என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.