Last Updated : 03 Nov, 2014 10:53 AM

 

Published : 03 Nov 2014 10:53 AM
Last Updated : 03 Nov 2014 10:53 AM

ரூ.2 ஆயிரம் கடனுக்கு ரூ.40 ஆயிரம் வரை வட்டி வசூலிக்கும் குடிசை மாற்று வாரிய நிர்வாகம்

ரூ.2 ஆயிரம் கடனுக்கு ரூ.40 ஆயிரம் வரை அபராதம், வட்டி, தண்ட வட்டி வசூலிக்கிறது குடிசை மாற்று வாரியம். இந்த வட்டியைத் தள்ளுபடி செய்யுமாறு கடந்த 30 ஆண்டுகளாக வீட்டுமனை ஒதுக்கீடுதாரர்கள் கோரி வருகின்றனர்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 1980-ம் ஆண்டு வாக்கில் குடிசை மாற்று வாரிய வீட்டுமனைப் பிரிவுகளில் சுகாதார வசதியை மேம்படுத்துவதற்காக குளியலறை மற்றும் கழிப்பிடம் கட்டுவதற்காக உலக வங்கி நிதி உதவித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.2 ஆயிரம் கடன் வழங்கப்பட்டது. இக்கடன் அப்போதிருந்தே சரிவர வசூலிக்கப்படவில்லை. மக்களும் இக்கடனை அரசு தள்ளுபடி செய்துவிடும் என்ற எண்ணத்தில் அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்துவிட்டனர்.

இந்த நிலையில் வீட்டுமனை ஒதுக்கீடுதாரர் இறந்துவிட்டால், பெயர் மாற்றம் செய்வதற்காகவோ அல்லது மனைக்கான தவணைத் தொகை முழுவதும் செலுத்திவிட்டு விற்பனைப் பத்திரம் வாங்கவோ சென்றால் ரூ.2 ஆயிரம் கடன் செலுத்தாததற்கான அபராதம், வட்டி, தண்ட வட்டி ஆகிய வற்றைச் சேர்ந்து மொத்தமாக ரூ.40 ஆயிரம் வரை செலுத்த சொல்கிறார்கள். இத்தொகையைச் செலுத்த முடியாமல் ஒதுக்கீடுதாரர்கள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து வியாசர்பாடியில் ‘தேவை’ என்ற பெயரில் அமைப்பு நடத்தும் இளங்கோ கூறும்போது, “விவசாயக் கடனை அசல் மற்றும் வட்டியுடன் அரசு தள்ளுபடி செய்தது. அதுபோல வீட்டு வசதி வாரிய வீட்டுமனை மற்றும் அடுக்குமாடி வீடுகளுக்கான தவணைத் தொகை கட்டத் தவறியவர்களுக்கான அபராத வட்டியையும் அரசு தள்ளுபடி செய்தது. அதுபோல குடிசை மாற்று வாரிய வீட்டுமனை ஒதுக்கீடுதாரர்களுக்கு வழங்கப் பட்ட ரூ.2 ஆயிரம் கடனுக்கான அபராதம், வட்டி, தண்ட வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒதுக்கீடுதாரர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றனர்” என்றார்.

வாரிய அதிகாரி விளக்கம்

இது தொடர்பாக குடிசை மாற்று வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 1,33,000 அடுக்குமாடி வீடுகளும், 1,32,000 வீட்டுமனைகளும் ஏழைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இன்று இவற்றின் மதிப்பு (லட்சக்கணக்கில்) பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், அரசு குறைந்த வட்டியில் வழங்கிய ரூ.2 ஆயிரம் கடனை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றனர். அவர்களது பொருளாதார நிலை மேம்பட்டுள்ளதால், ரூ.2 ஆயிரம் கடனுக்கான 30 ஆண்டுகால கூட்டுவட்டி ரூ.40 ஆயிரம் செலுத்துவதில் சிரமம் இருக்காது.

அரசின் கொள்கை முடிவு

கோடிக்கணக்கான மதிப்புள்ள இக்கடன் வட்டியைத் தள்ளுபடி செய்வது என்பது அரசின் கொள்கை முடிவாகும். அதுபற்றி நாங்கள் எதுவும் கூற முடியாது. வீடு, வீடாய்ப் போய் கடனோ அல்லது வட்டியோ வசூலிக்க குடிசை மாற்று வாரியத்தில் போதிய ஆட்கள் இல்லை. தனியாரிடம் கடன் வாங்கினால் எப்படி பொறுப்பாக திருப்பிச் செலுத்துவார்களோ அதுபோல இக்கடனையும் திருப்பிச் செலுத்த ஒதுக்கீடுதாரர்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குடிசை மாற்று வாரிய வீட்டுமனை ஒதுக்கீடுதாரர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2 ஆயிரம் கடனுக்கான அபராதம், வட்டி, தண்ட வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒதுக்கீடுதாரர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x