Published : 10 Nov 2014 09:40 AM
Last Updated : 10 Nov 2014 09:40 AM
வட கிழக்கு பருவ மழைக் காலம் தொடங்கியது முதல் தமிழகத்தில் இதுவரை சராசரியாக 267.8 மி.மீ. மழை பெய்துள்ளது. மாநிலத்தில் எதிர்பார்த்ததை விட 7 சதவீதம் அதிகமாக இருந்தாலும், வட மாவட்டங்களில் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை தமிழகத்தில் சராசரியாக 250 மி.மீ. மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதை விட 7 சதவீதம் அதிகமாக 267.8 மி.மீ. மழை பதிவாகியது. எனினும் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் மழை மிகவும் குறைவாக பெய்துள்ளது.
திருவண்ணாமலையில் பெய்த 132.2 மி.மீ. மழை 48 சதவீதம் பற்றாக்குறையாகும், வேலூரில் பெய்த 115 மி.மீ. 45 சதவீதம் பற்றாக்குறையாகும். அதே போன்று, காஞ்சிபுரத்தில் 31 சதவீதம், திருவள்ளூரில் 15 சதவீதம் பற்றாக்குறையாக மழை பெய்துள்ளது. பருவ மழைக் காலம் முடிய இன்னும் 40 நாட்கள் உள்ளதால் மழை பற்றாக்குறை சமன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மழை அளவு எதிர்பார்த்ததை விட அதிகமாகவே பெய்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 75 சதவீதம், ஈரோடு மாவட்டத்தில் 55 சதவீதம், திருப்பூரில் 40 சதவீதம் அதிகமாக பெய்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT