

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த கொல்கத்தா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், கோவையில் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து தொடர்ந்தது உச்ச நீதிமன்றம்.
இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்து ழைக்காததால், அவரைக் கைது செய் யும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையி லான 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு கடந்த மே 9-ம் தேதி கொல்கத்தா போலீ ஸாருக்கு உத்தரவிட்டது. கைது உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்ணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, தமிழகம் வந்த கொல்கத்தா போலீஸார், அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும், அவரைக் கைது செய்ய முடியவில்லை.
கடந்த 11-ம் தேதி நீதிபதி கர்ண னுக்கு 62 வயது பூர்த்தியானதால், அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. தலைமறைவு நிலையிலேயே அவர் ஓய்வுபெற்றார்.
இதற்கிடையே, கோவை மாவட் டத்தில் அவர் பதுங்கியுள்ளதாக கொல்கத்தா போலீஸுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை மாநகர காவல் துறையினரின் உதவியை அவர்கள் நாடினர்.
மேற்கு வங்க காவல் துறையைச் சேர்ந்த 3 தனிப்படையினர் மற்றும் கோவை மாநகர, மாவட்ட காவல் துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். கர்ணனின் செல்போனின் அழைப்புகளை தீவிர மாக ஆய்வு செய்ததில், அவர் கோவை அருகே மலுமிச்சம்பட்டி யில் உள்ள ஒரு தனியார் கட்டி டத்தில் பதுங்கியிருப்பது தெரியவந் துள்ளது. இதையடுத்து, நேற்று மாலை போலீஸார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து மாநகர போலீஸார் கூறும்போது, “முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் தலைமறைவாக இருப்ப தாகவும், அவரை பிடிக்க உதவு மாறும் கொல்கத்தா போலீஸார் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கொல்கத்தா போலீஸாருக்கு தொழில்நுட்ப ரீதியிலான உதவிகள் செய்யப்பட்டன. மலுமிச்சம்பட்டியில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்து, கைது செய்யப்பட்டார். அவரை கொல்கத் தாவுக்கு அழைத்துச் செல்வது குறித்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்” என்றனர்.
விமானம் மூலம் கொல்கத்தாவுக்கு அவரை அழைத்துச் செல்ல இருப்பதாகத் தெரியவருகிறது.