மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை: திருவள்ளூரில் மேலும் ஒரு சிறுவன் பலி - காய்ச்சல் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆனது

மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை: திருவள்ளூரில் மேலும் ஒரு சிறுவன் பலி - காய்ச்சல் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆனது
Updated on
2 min read

திருவள்ளூர் மாவட்டத்தை கலக்கி வரும் மர்மக் காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்தார். மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர் உயிரிழப்புச் சம்பவம் மக்களிடையே மேலும் பீதியை கிளப்பியுள்ளது. இதுவரை காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. மாவட்ட நிர்வாகம் வைரஸ் காய்ச்சல் என அறிவித்து, பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இருப்பினும் காய்ச்சல் பாதிப்பு கள் தொடர்வதால் திருத்தணி, பொன்னேரி, திருவள்ளூர் மருத்து வமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

திருத்தணி அடுத்த பொதட்டூர் பேட்டை, சொரக்காய்பேட்டை, கேசவராஜ குப்பம், காவேரிரா ஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராள மானோர் இந்நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். காவேரிராஜபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 4 சிறுவர்கள் காய்ச்சலுக்குப் பலியாயினர். இவர்களில் ஒரு சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் என அமைச்சர் விஜயபாஸ்கர் ஒப்புக்கொண்டார்.

பின்னர் பொன்னேரி அருகே உள்ள கீரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் உயிரிழந்தார். இதனால் கீரப்பாக்கம் கிராம மக்கள் டெங்கு பீதியில் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில்தான் நேற்று மேலும் ஒரு சிறுவன் உயிரிழந் துள்ளார். திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த தேவன் என்பவரது மகன் சீனிவாசன். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார். 2 தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் கடுமை யானதால் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் நேற்றுமுன்தினம் சீனிவாசன் உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, சிறுவனின் உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் அவர்களைச் சமாதானப்படுத்தினர். இச்சம்பவத் தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையே, பொன்னேரி அரசு மருத்துவமனையில் காய்ச்ச லால் பாதிக்கப்பட்டவர்களை சுகா தார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழிசை நலம் விசாரிப்பு

திருத்தணி அரசு மருத்துவ மனையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நேரில் நலம் விசாரித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகையான சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற் கொள்வதற்கான வசதிகள் ஏற் படுத்த வேண்டும். கிராமப்பகுதி களில் நிலவும் சுகாதார சீர்கேடு களை தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதார துறை போதிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தைத் தீவிரமாக செயல்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு தமிழிசை கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in