Published : 26 Dec 2013 09:40 AM
Last Updated : 26 Dec 2013 09:40 AM

உண்ணாவிரத போராட்டம்: சென்னைக்குள் நுழைய மதுரை மாணவிக்கு திடீர் தடை

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருப்பதற்காக, மதுரையில் இருந்து தந்தையுடன் பைக்கில் வந்த சட்டக் கல்லூரி மாணவியை குரோம்பேட்டையில் மடக்கி, போலீஸார் திருப்பி அனுப்பினர்.

மதுரை சட்டக் கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வரும் மாணவி நந்தினி, பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் உண்ணாவிரதம் இருந்தவர், பின்னர் அதை கைவிட்டார். இந்நிலையில், பூரண மதுவிலக்கு கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க நந்தினி முடிவு செய்தார்.

இதற்காக கடந்த திங்கள்கிழமை காலை மதுரையில் இருந்து தனது தந்தை ஆனந்தனுடன் பைக்கில் சென்னைக்கு புறப்பட்டார். மாலை 4 மணியளவில் திருச்சி வந்தடைந்த அவர்களை மாநகர போலீஸார் தடுத்து நிறுத்தி, ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சென்னை செல்லும் முடிவில் உறுதியாக இருந்ததால் அவர்களை விடுவித்தனர்.

பின்னர் நந்தினியும் ஆனந்தனும் சென்னை புறப்பட்டனர். செவ்வாய்கிழமை மாலை 6 மணி அளவில் அவர்கள் குரோம்பேட்டைக்கு வந்த அவர்களை சென்னை மாநகர போலீஸார் தடுத்து நிறுத்தினர். இருவரும் சோர்வாக இருந்ததால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இருவரையும் சென்னை நகருக்குள் அனுமதிக்க முடியாது என்று போலீஸார் உறுதியாக கூறிவிட்டனர். இதனால் வேறு வழியின்றி தந்தையுடன் நந்தினி பைக்கிலேயே மீண்டும் மதுரை புறப்பட்டுச் சென்றார். அவர்கள் மனம் மாறி மீண்டும் சென்னைக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக, போலீஸார் மற்றொரு வாகனத்தில் செங்கல்பட்டு வரை பின்தொடர்ந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x