பொங்கல் திருநாளை பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு டி.கே. ரங்கராஜன் கடிதம்

பொங்கல் திருநாளை பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு டி.கே. ரங்கராஜன் கடிதம்
Updated on
1 min read

பொங்கல் தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் எம்.பி., மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் டி.கே. ரங்கராஜன் கூறியிருப்பதாவது:

''தமிழகத்துக்கு பொங்கல் மிக முக்கியமான பண்டிகையாகும். மத்திய அரசின் 2017-ம் ஆண்டிற்கான விடுமுறைகள் தினப் பட்டியலில் ஜனவரி 14 பொங்கல் தினம் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படவில்லை. மாறாக விருப்ப விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகாறும் பொங்கல் தினம் பொது விடுமுறை தினமாகவே அறிவிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த ஆண்டில் பொங்கல் தினம் சனிக்கிழமையில் வந்தாலும் தபால் நிலையங்கள், பாதுகாப்புத் துறையின் அலுவலகங்கள், மத்திய சுகாதாரத்துறை திட்ட அலுவலகங்கள் போன்ற மத்திய அரசின் பல்வேறு அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் இயங்குவதை தாங்கள் அறிவீர்கள்.

தமிழக மக்கள் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ள பொங்கல் திருநாள் தமிழக மக்களின் மிக முக்கியமான திருநாளாகும். எனவே பொங்கல் தினத்தை தமிழகத்தில் பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இப்பிரச்சினையில் தாங்கள் உடனடியாக தலையிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்'' என்று டி.கே. ரங்கராஜன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in