ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ரயில்களின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக: ஜி.கே.வாசன்

ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ரயில்களின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக: ஜி.கே.வாசன்
Updated on
2 min read

ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ஆகிய ரயில்களில் பயணக் கட்டண உயர்வை திரும்பப் பெற மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாடு முழுவதும் உள்ள மக்கள் பயணம் செய்வதற்கும், சரக்குகளை கொண்டு செல்வதற்கும் ரயில் போக்குவரத்து மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன் கருதி ரயில் சேவையை இயக்கிட வேண்டியது மத்திய அரசின் கடமை.

ஆனால் பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ரயில் கட்டணத்தை உயர்த்திக்கொண்டே போகிறது. இதனால் பெருமளவு பாதிக்கப்படுவது அன்றாடம் பயணம் மேற்கொள்கின்ற சாதாரண ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் தான் என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தற்போது ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ஆகிய ரயில்களில் பயணக் கட்டணத்தை உயர்த்தி, அதனை நாளை முதல் அமல்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகம் முடுவெடுத்துள்ளது. அதன்படி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கட்டண உயர்வு அமையும். அதாவது முதல் 10 சதவீத டிக்கெட்டிற்கு மேல் தொடர்ந்து வரும் ஒவ்வொரு 10 சதவீத டிக்கெட்டுகளுக்கும் அடுத்தடுத்து 10 சதவீத கட்டணம் உயர்ந்து கொண்டே போகும். இது மாதிரி 11 சதவீத டிக்கெட்டுகள் முதல் 60 சதவீத டிக்கெட்டுகள் வரை பயணக் கட்டணம் ஏற்கனவே இருந்த கட்டணத்தை விட உயர்த்தப்பட்டு, விற்பனை செய்யப்பட உள்ளது.

முதல் வகுப்புக்கு கட்டண உயர்வு இல்லையென்றாலும் 2 அடுக்கு ஏசி, 3 அடுக்கு ஏசி மற்றும் 2 ஆம் வகுப்பு படுக்கை மற்றும் உட்காரும் வசதி கொண்ட டிக்கெட்டுகளின் பயணக் கட்டணம் உயர்த்தப்படுவதால் ஏற்கெனவே இருந்த கட்டணத்தை விட அதிக பட்சமாக ஒன்றரை மடங்கு வரை கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இதனால் ரயில்வே துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பதற்காக ரயில் பயணிகளிடம் சுமையை ஏற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கெனவே விலைவாசி உயர்வினால் போதிய பொருளாதாரம் இன்றி பாதிக்கப்படுகின்ற பொது மக்களுக்கு இந்த கட்டண உயர்வு கூடுதல் சுமையை உண்டாக்கும். இந்த திடீர் கட்டண உயர்வால் பண்டிகை மற்றும் விழாக்களுக்கு செல்ல இருக்கின்ற ரயில் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.

இது போன்ற கட்டண உயர்வை ஏற்கெனவே நீதிமன்றங்கள் நிராகரித்திருப்பதை மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். எனவே மத்திய ரயில்வே அமைச்சகம் தற்போது உயர்த்தியிருக்கும் ரயில் கட்டணத்தை திரும்ப பெற மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் நாட்டு மக்களுக்கு குறிப்பாக ஏழை, எளிய, சாதாரண நடுத்தர மக்களுக்கு சேவைப்புரியும் நோக்கத்தோடு ரயில் போக்குவரத்தை இயக்குவதற்கு மத்திய பாஜக அரசு முன்வர வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in