

காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே படகு மீது கப்பல் மோதியதால் கடலுக்குள் விழுந்த 2 மீனவர்கள் மாயமாகிவிட்டனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 4-ம் தேதி மீனவர்கள் சங்கர் (28), குறளையா (19), குட்டி ஆகியோர் உட்பட 7 பேர் ஒரு பைபர் படகில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். கடலுக்குள் வலையை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது அந்த வழியாக சென்னை துறைமுகத்துக்குள் வந்த சரக்கு கப்பல் படகு மீது மோதியது. இதில் படகு கவிழ்ந்து அதில் இருந்தவர்கள் அனைவரும் கடலுக்குள் விழுந்தனர். அவர்கள் கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக மற்றொரு படகில் வந்த மீனவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டனர். ஆனால் சங்கர், குறளையா ஆகிய 2 பேரை மட்டும் காணவில்லை. இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.