

தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 1,021 கடல் ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்துள்ளனர்.
கடல் வளத்தை காப்பதில் கடல் ஆமைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை ராமேசுவரம் கடலோரப் பகுதிகளுக்கு வந்து, முட்டையிட்டு செல்வது வழக்கம். இந்த முட்டைகள், நாய் மற்றும் பறவைகளால் சேதமடைவதைத் தடுக்கும் விதமாக அவற்றை சேகரித்து அதற்கென அமைக்கப்பட்டுள்ள குஞ்சு பொறிப்பகங்களில் அடைகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நேற்று தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் வனத்துறையினர் ஆமை முட்டைகளை சேகரித்தனர். இது தொடர்பாக மண்டபம் வனச்சரகர் சதீஷ் கூறும்போது, “ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரத்திலிருந்து, தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதி வரை 1,021 முட்டைகளை நேற்று சேகரித்தோம். இவை தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரத்தில் உள்ள ஆமை முட்டை பொறிப்பகங்களில் அடைகாக்க வைக்கப்பட்டுள்ளன. குஞ்சு பொறிப்பகத்தில் இருந்து பெறப்பட்ட 366 ஆமை குஞ்சுகள் நேற்று கடலில் விடப்பட்டன” என்றார்.