Last Updated : 01 Aug, 2016 09:56 AM

 

Published : 01 Aug 2016 09:56 AM
Last Updated : 01 Aug 2016 09:56 AM

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரக இணையதளம் புதுப்பிக்கப்படாததால் தகவல் தேடுவோருக்கு ஏமாற்றம்

தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் புதுப்பிக்கப்படாமல் உள்ளதால், தகவல் தேடுவோர் ஏமாற்றம் அடையும் சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக மது விற்பது, மது கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களை தடுக்கும் பணிகளில் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஈடுபட்டு வருகிறது. இந்தத் துறைக்கான ஆணைய தலைமையகத்தில் ஓர் ஆணையர், 2 இணை ஆணையர்கள், 7 துணை ஆணையர்கள், நிதி அதிகாரி மற்றும் நிதி நிர்வாக அதிகாரி ஆகியோர் பொறுப்பில் உள்ளனர். இவர்கள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகின்றனர்.

இது தவிர மாவட்டம் மற்றும் வட்ட அளவிலும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரக அதிகாரிகள் உள்ளனர். இந்த அதிகாரிகளின் பணிகள், தமிழக அரசின் மதுவிலக்கு சட்டம் 1937 மற்றும் அதற்கு பிந்தைய சட்டத்திருத்தங்கள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்கக் குறிப்பேடு உள்ளிட்ட தகவல்கள், தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரக இணையதளத்தில் (http://www.cpe.tn.gov.in/contacts.html) பதிவேற்றப்பட்டு வருகின்றன. எனவே, மதுவிலக்கு ஆர்வலர்களும், பொதுமக்களும் இந்த இணையதளத்தை பரவலாக பார்த்து வருகின்றனர்.

ஆனால், கடந்த சில மாதங்களாக அந்தத் துறையின் இணையதளம் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அமைச்சராக தற்போது பி.தங்கமணி உள்ளார். ஆனால், அந்த ஆணையரக இணையதளத்தில் சென்ற ஆட்சியில் துறையின் அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதனின் பெயரே உள்ளது. இதேபோல், ஆணையர் பெயரும் சமீபத்தில் பொறுப்பேற்ற ஆர்.கிர்லோஷ்குமார் பெயருக்கு பதிலாக முந்தைய ஆணையர் மகேஷ்வரனின் பெயரே உள்ளது.

இது மட்டுமன்றி, மூடப்பட்ட மதுக்கடைகளின் விவரம், கோயில், பள்ளிகள் அருகே உள்ள மதுக்கடைகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் என புதிய தகவல்கள் எதுவும் அந்த இணையதளத்தில் இல்லை. அரசுப் பணிகள் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில், முக்கியமான துறையின் இணையதளம் புதுப்பிக்கப்படாமல் உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குநருமான ஆர்.கிர்லோஷ்குமாரை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘நான் அண்மையில்தான் பொறுப்புக்கு வந்தேன். எனவே, அதனை கவனிக்கவில்லை. உடனடியாக புதிய தகவல்களை பதிவேற்றம் செய்ய உத்தரவிடுகிறேன்’’ என்றார்.

மதுவிலக்கு, ஆயத்தீர்வை இணையதளம் புதுப்பிக்கப்படாததால், துறை அமைச்சர் பெயர் தவறாக இடம்பெற்றுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x