Published : 16 Jan 2014 02:36 PM
Last Updated : 16 Jan 2014 02:36 PM

விடுவிக்கப்பட்ட தமிழக - இலங்கை மீனவர்கள் இன்று ஒப்படைப்பு

விடுதலை செய்யப்பட்ட இலங்கை, தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையில் இன்று அவரவர் நாட்டு கடற்படையிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.

இலங்கை சிறையிலிருந்து 52 தமிழக மீனவர்களையும், தமிழகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 52 இலங்கை மீனவர்களும் கடந்த திங்கட்கிழமை பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டனர்.

புதன்கிழமை சர்வதேச எல்லையில் இரு நாட்டு கடற்படையிடமும் பரஸ்பரம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மீனவர்களை ஒப்படைப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் விடுதலை செய்யப்பட்ட 52 தமிழக மீனவர்கள் 'சக்தி' எனும் இலங்கை கடற்படை கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டு, காரைக்காலில் உள்ள மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

முன்னதாக விடுதலை செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 52 பேரும் புதன்கிழமை மாலை 6 மணியளவில், இந்திய கடலோர பாதுகாப்பு படையிடம், காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

இலங்கை மீனவர்கள் 52 பேர் இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல் மூலம் அழைத்து செல்லப்பட்டு, இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லையில் சக்தி எனும் இலங்கை கடற்படை கப்பலில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் தலைமன்னார் சென்றடைவார்கள்.

கடந்த நவம்பர் 20 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டை பட்டினம் பகுதியை சேர்ந்த ஆனந்த், குமரேசன், குரளரசன், முத்தையா ஆனந்த் உள்ளிட்ட 20 மீனவர்கள் கோடியக்கரையிலிருந்து 20 நாட்டிகல் மைல் தொலைவில் தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த போதும், அக்டோபர் 15 அன்று காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன்பிடிச்ச சென்ற அன்பழகன், ஆனந்தவேலு, செல்லத்துறை மற்றும் பொன்னுச்சாமி ஆகிய நான்குபேருக்குச் சொந்தமான 4 விசைப்படகுகளில் 32 மீனவர்கள் இலங்கை திரிகோணமலை பகுதி நீர்பரப்பில் மீன்பிடித்தாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x