Published : 11 Feb 2014 09:40 AM
Last Updated : 11 Feb 2014 09:40 AM

எம்.பி. தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும்: தேமுதிகவினருக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற தேமுதிகவினர் கடுமையாக உழைக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் நாள் ரசிகர்கள் நற்பணி மன்றத்துக்கென தனிக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. அன்பு, அறம், ஆற்றல் என்கின்ற உயர்ந்த நோக்கத்துடன், புரட்சி தீபம் ஏந்திய மூவர்ணக் கொடியை அறிமுகப்படுத்தினோம்.

இந்தக் கொடியை ஏந்தி 2001-ம் ஆண்டு முதல் பல்வேறு தேர்தல்களைச் சந்தித்து வந்துள்ளோம். ஒவ்வொரு முறையும் கடுமையான சோதனைகளை அடுக்கடுக்காக சந்தித்து வந்திருக்கிறோம். தமிழகத்தில் மின்வெட்டால் சிறு, குறு தொழிற்சாலைகள், விசைத்தறித் தொழில், விவசாயம் பாதிப்பு, குடிநீர் தட்டுப்பாடு, கடுமையான விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், மீனவர் பிரச்சினை என எந்த வகையிலும் மக்கள் நிம்மதியாக வாழ வழியில்லாமல் சிக்கித் தவிக்கிறார்கள்.

மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு எதிரான போக்கை கடைபிடித்து வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கிடைத்த வாய்ப்பாக நாடாளுமன்றத் தேர்தலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேமுதிக வெற்றி பெறுவதற்கு அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். தேமுதிக கொடி நாளான 12-ம் தேதி (புதன்கிழமை) அனைத்து பகுதிகளிலும் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கியும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x