Published : 27 Mar 2017 09:15 AM
Last Updated : 27 Mar 2017 09:15 AM

திண்டுக்கல்லில் தீபா கணவருக்கு கருப்பு கொடி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவனுக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையினர் திண்டுக்கல்லில் கருப்புக் கொடி காண்பித்தனர்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பைத் தொடங்கி உள்ளார். இவரது கணவர் மாதவன் புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ஆதரவாளர் களுடன் ஆலோசனை நடத்துவதற் காக அவர் நேற்று திண்டுக்கல் வந்தார். அங்கு மாதவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கட்சியின் பெயர் இனிமேல்தான் அறிவிக்கப்படும். மாவட்டவாரியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தொண்டர்களை சந்திக்க உள்ளேன். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்பது ஒரு அமைப்புதான். அரசியல் கட்சி அல்ல. தீபா ஆர்.கே.நகர் தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடவில்லை. அவர் சுயேச்சையாகத்தான் போட்டியிடுகிறார்.

வேட்புமனு தாக்கலின்போது ஒரு பதற்றத்தில் கணவர் பெயரைக் குறிப்பிட தீபா மறந்துவிட்டார். அவரை சில தீயசக்திகள் வெளியில் இருந்து இயக்குகின்றன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீபாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். எங்களுக்குள் குடும்பத் தகராறு ஏதும் இல்லை.

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவதாக கூறிய தீபா பின்னர் மாற்றிக்கொண்டது குறித்து அவரிடம்தான் கேட்கவேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தை, தீபா சந்தித்தபோது நான் அவருடன் இருக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. தொண்டர்கள், பொதுமக்கள் அழைத்ததால்தான் அரசியல் கட்சியை தொடங்க உள்ளேன் என்றார்.

கட்சியின் பெயரை அறிவிக்கும் முன்பே திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை அவர் வெளியிட்டார். முன்னதாக, திண்டுக்கல்லில் மாதவன் தங்கியிருந்த ஹோட்டல் முன் கூடிய தீபா பேரவையினர், தீபா படத்தை பயன்படுத்தக் கூடாது என கூறி கருப்புக் கொடி காண்பித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x