Published : 21 Nov 2013 01:31 PM
Last Updated : 21 Nov 2013 01:31 PM

தமிழக மீனவர்கள் 20 பேருக்கு டிச.4 வரை காவல்: இலங்கை நீதிமன்றம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேரையும் டிசம்பர் 4-ம் தேதி வரை காவலில் வைக்க, அந்நாட்டின் மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும். தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தைகளை விரைவில் நடத்த வேண்டும். இரு நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களின் போராட்ட வியூகங்களை தீவிரப்படுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம் என போராடி வந்தனர்.

கடந்த வாரம் மீனவப் பிரதிநிதிகள் புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர் சல்மான் குர்சித் ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்து தொடர்கதையாக நீடிக்கும் மீனவர்களின் போராட்டங்களை முற்றுப்புள்ளி வைக்கக் கோரினர். மீனவர்களின் கோரிக்கைகளை பிரமதமரும், மத்திய அமைச்சரும் இலங்கை அரசிடம் காமன்வெல்த் மாநாட்டிலேயே இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு நாள் குறிக்கப்படும் என உறுதியளித்தனர்.

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர் சல்மன் குர்சித் ஆகியோரின் உறுதிமொழியை ஏற்று தங்களின் தொடர் போராட்டங்களை வாபஸ் பெற்று திரும்பவும் கடலுக்குச் சென்று தொழில் பார்க்க ஒத்துக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் சார்நத 250–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

கோடியக்கரைக்கு கிழக்கே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்தாகக்கூறி 5 விசைப்படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 20 மீனவர்களை கைது செய்தனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட 20 மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், மீனவர்கள் 20 பேரையும் டிசம்பர் 4-ம் தேதி வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

நவம்பர் 21-ம் தேதியை சர்வதேச மீனவர் தினம். இந்நாளில் இலங்கை கடற்படையினர் 20 தமிழக மீனவர்களை பிடித்துக் கொண்டு சென்றது மீனவர்கள் மத்தியில் கவலையை மேலும் கூட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x