Last Updated : 12 Apr, 2017 10:16 AM

 

Published : 12 Apr 2017 10:16 AM
Last Updated : 12 Apr 2017 10:16 AM

ஜவுளிக்கடை கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள்: இருவர் சிக்கினர், பரபரப்பு தகவல்கள்

மதுரையில் ‘வாக்கிங்’ செல்வது போல் நடித்து, ஜவுளிக்கடை கொள்ளையை அரங்கேற்றிய வடமாநில இளைஞர்கள் இருவர் சிக்கினர்.

மதுரை தெற்குமாசி வீதியில் செயல்படும் ஜவுளிக் கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொள்ளை நடந்தது. அங்குள்ள ‘ரிமோட்’ ஷட்டரை வளைத்து உள்ளே புகுந்த கொள்ளையன் பெட்டகம், கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.8 லட்சத்து 4 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பினர். இந்த சம்பவத்தில் வடமாநில இளைஞர்கள் ஈடுபட்டிருக்கலாம் என, துவக்கத்திலேயே போலீஸார் சந்தேகித்தனர். நகர் காவல் உதவி ஆணையர் பாண்டி தலைமையில் தனிப்படையினர் விசாரணையில் இறங்கினர்.

ஜவுளிக்கடை மற்றும் தெருக்களில் பிற கடைகளில் பொருத்திய கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் 4 பேர் காரில் வந்து கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது. துரிதமாக செயல்பட்ட போலீஸார் கொள்ளை தொடர்பாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரு இளைஞர்களை பிடித்துள்ளனர். மேலும், தப்பிய இருவரை தேடுகின்றனர்.

போலீஸ் தரப்பில் கூறியதாவது: ஜவுளிக்கடை கொள்ளையில் 4 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முன் கூட்டியே காரில் சம்பவ இடத்திற்கு வந்து ஆட்களின் நடமாட்டத்தை நோட்டமிட்டனர். இதன்பின், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு காரில் அங்கு வந்துள்ளனர். கடையின் அருகில் காரை நிறுத்திவிட்டு, அதே ரோட்டில் யாருக்கும் தெரியாமல் இருக்க, நடை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடைக்குள் நுழையக்கூடிய வழியை தேர்வு செய்து, அவ்விடத்தை துணியால் 3 பேர் மறைத்து நின் றுள்ளனர். முன்கூட்டியே ‘ரிமோட்’ ஷட்டரை வளைத்து, அதன் வழியாக ஒருவரை மட்டுமே உள்ளே அனுப்பிவிட்டு மூவர் வெளியில் நின்றுள்ளனர். சுமார் 30 நிமிடத்திற்குள் உள்ளே சென்ற நபர் காரியத்தை கச்சிதமாக முடித்து வெளியேறிய பின், காரில் சென்றுள்ளனர். சிசிடிவி ஆய்வில் இது போன்ற நிகழ்வுகள் ஓரளவுக்கு தெரியவந்தாலும், கார் மூலமே துப்பு துலங்க போலீஸார் திட்டமிட்டனர். நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை மேலமாசி வீதியில் சந்தேகத்திற்குரிய ஒரு காரை போலீஸார் பின் தொடர்ந்தனர். ரயில் நிலைய பகுதி விடுதியில் சென்ற அவர்கள் அங்கு அறை எடுக்க முயன்றனர்.

அப்போது சுற்றி வளைத்தபோது, போலீசை கண்டதும் இருவர் தப்பினர். இருவர் சிக்கினர். விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந் தவர்கள் எனத் தெரிந்தது. தெற்குமாசி வீதி ஜவுளிக்கடை கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மொழி பிரச்சினையால் இந்தி தெரிந்த நபர்களை பயன்படுத்தி விசாரிக் கிறோம். தப்பியோடிய இருவரை தேடுகிறோம். வேறு கொள்ளையில் தொடர்பு உள்ளதா என விசாரிக்கிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x