Published : 11 Dec 2015 04:42 PM
Last Updated : 11 Dec 2015 04:42 PM

சென்னை வெள்ளத்தில் மாநகராட்சி நிர்வாக தோல்வி அம்பலம்

கடந்த 4 ஆண்டுகளில் சென்னையின் புதிய புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்புத் திட்டங்கள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது என்றும், இத்திட்டங்களை நேரத்தில் முடித்திருந்தால் சென்னையில் புதிதாகத் தோன்றிய புறநகர் பகுதிகளில் மழை வெள்ள சேதத்தை குறைத்திருக்க முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

சென்னை பெருநகரப் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் மழைநீர் வடிகால் அமைப்புகள் மற்றும் கால்வாய் கட்டுமானம் மற்றும் இணைப்புப் பணிகள் ஆகியவை கடந்த 4 ஆண்டுகளில் நகர்ப்புறங்களின் வேகமான வளர்ச்சிக்கேற்ப இணைந்து செல்லவில்லை. மாநகராட்சி நிர்வாகத்தின் தோல்வி தற்போது இந்த மழை வெள்ளத்தினால் அம்பலமாகியுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சுமார் 426 சதுர கிமீ பரப்பளவில் 33,000 தெருக்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான அதிகாரபூர்வ, அதிகாரபூர்வமற்ற கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் 4 ஆண்டுகளுக்கு முன்பாக திட்டமிடப்பட்ட, இத்தகைய கட்டுமான வளர்ச்சியுடன் இணைந்து செல்ல வேண்டிய, 1,055 கிமீ மழைநீர் வடிகால் அமைப்புப் பணிகளில் முன்னேற்றம் இல்லை.

இந்த 4 ஆண்டு காலக்கட்டத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிப் பகுதியில் 40% பகுதிகளை நிர்வகித்து வரும் சென்னை மாநகராட்சி இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை.

சென்னையைப் புரட்டிப் போட்ட இந்த கனமழை வெள்ளத்திலும் சில பகுதிகள் பெருமளவு பாதிப்படையாமல் பிழைத்ததற்குக் காரணம், சில பகுதிகளில் கவுன்சிலர்கள் சிலரின் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளால் நடைபெற்ற புதிய திட்டங்களே.

திருவொற்றியூர் வார்டு 1 கவுன்சிலர் எழிலரசி கூறும்போது, தாமரைக்குளம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை இணைக்கும் ரூ.75 லட்சம் திட்டம் பல கோரிக்கைகளுக்குப் பிறகு செயல்படுத்தப்பட்டதனால் சில பகுதிகள் தப்பித்தன என்றார்:

"எங்கள் வார்டு கொசஸ்தலையாற்றின் முகவாயில் உள்ளது. சிறு மழைநீர் வடிகால் அமைப்புகள் பலரது உயிரைக் காப்பாற்றியுள்ளது. ஆனால் பல பகுதிகள் கொசஸ்தலையாறு வெள்ளத்தில் மூழ்கியது” என்கிறார்.

திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோளிங்கநல்லூர் ஆகிய பகுதிகளின் விரிவாக்கப் பகுதிகள் அதிகம் பாதிப்புள்ளானதற்குக் காரணம் ரூ.4,000 கோடி மழை நீர் வடிகால் அமைப்புகளை உருவாக்கும் திட்டம் மாநகராட்சியினால் தாமதிக்கப்பட்டதினால்தான்.

8 மண்டலங்களில் வெள்ள பாதிப்பை குறைக்கும் 1,055 கிமீ மழைநீர் வடிகால்கள் ஏற்படுத்தும் திட்டம் 2012-ம் ஆண்டு முன்மொழியப்பட்டது. ஆனால் இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு தாமதப்படுத்தப்பட்டது. இதனால் விரிவாக்கமடைந்த 8 புதிய பகுதிகளுக்கான ரூ.4000 கோடி மழைநீர் வடிகால் திட்டம் இன்னமும் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த 8 மண்டலங்களில் அம்பத்தூரில் மட்டும்தான் 177.95 கிமீ-க்கு மழைநீர் வடிகால் அமைப்பு உள்ளது. ஆனால் இதுவுமே போதுமானதாக இல்லை.

நீலாங்கரை, ஒக்கியம், துரைப்பாக்கம், சடையங்குப்பம், காடப்பாக்கம், தீயம்பாக்கம், வடபெரும்பாக்கம், சுரப்பட்டு, கதிர்வாடு மற்றும் புதாகரம் ஆகிய பகுதிகள் சென்னை மாநகராட்சியின் கீழ் வந்து 4 ஆண்டுகள் ஆன பிறகும் மழை நீர் வடிகால் அமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை.

அடையாறு மற்றும் கூவம் ஆற்றுப் பகுதியில் அடங்கும் அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலங்களில் மழை நீர் வடிகால்கள் அமைக்க உலக வங்கி நிதி அளித்திருந்தும் ஆக்ரமிப்பாளர்களின் எதிர்ப்பு காரணமாக மழைநீர் வடிகால் அமைப்புகள் உருவாக்க முடியாமல் நிலுவையில் இருந்து வருகிறது.

கனமழை வெள்ள பாதிப்புகளையடுத்து காஞ்சிபுரம் நகராட்சி நிர்வாகம் நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர், சென்னை மாநகராட்சியும் அவ்வழியில் சென்றால்தான் அடுத்த கனமழைக்குள் ஓரளவுக்கு நிலவரங்களை சரிகட்ட முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x