Published : 28 Mar 2014 12:30 PM
Last Updated : 28 Mar 2014 12:30 PM

நோக்கியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் : தொழிலாளர் சங்க கவுரவ தலைவர் சவுந்திரராஜன் வேண்டுகோள்

நோக்கியா நிறுவனத்தில் பணிபுரியும் 8,000 ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் நோக்கியா இந்தியா தொழிலாளர் சங்கத்தின் கவுரவ தலைவர் அ.சவுந்தரராஜன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பெரும் புதூரில் நோக்கியா நிறுவனம் கடந்த 2005-ம் ஆண்டு புதிய தொழிற்சாலையை தொடங்கியது. இதில், மொத்தம் 8 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு கடந்த 5 ஆண்டுகளில் 500 மில்லியன் செல்போன்களை தயாரித்து தொழிலாளர்கள் சாதனையை புரிந்துள்ளனர்.

கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 8-ல் நோக்கியா நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி ரூ.2250 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, நோக்கியா நிறுவனத்தை ரூ.48,000 கோடிக்கு விற்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.

இதற்கிடையே, வருமான வரித்துறை டெல்லி நீதிமன்றத்தில் நோக்கியா நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது. அதன் மூலம் நோக்கியா நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டது. இதனால், நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் நோக்கியா நிறுவனம் சமர்ப்பித்த ஆவணங்களில் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கவும், தொழிற் சாலை மூடுவதற்கும் வழி முறைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே உற்பத்தி குறைப்பது, சில செல்போன் உற்பத்திகளை வெளிநாடுகளில் உள்ள நிறுவனங் களுக்கு மாற்றுவது போன்ற நடவடிக்கை யில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. சென்னையில் உற்பத்தி ஆலை இல்லாவிட்டாலும் மற்ற நாடுகளில் செல்போன்களை உற்பத்தி செய்து இந்தியாவில் விற்பனை செய்யும் வகையில் விற்பனை நிறுவனத்தை தனியாக பிரித்து உருவாக்கியுள்ளது.

மைக்ரோசாப்ட்டில் உலக நாடுகளில் உள்ள அனைத்து நோக்கியா தொழிற் சாலைகளும் மாறும்பொழுது சென்னை தொழிற்சாலையும் இணைந்தால் மட்டுமே இங்குள்ள தொழிலாளர்களின் வேலைபாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மனு அளிக்கவுள்ளோம். வரும் 31-ம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x