Published : 10 Apr 2017 06:50 PM
Last Updated : 10 Apr 2017 06:50 PM
விவசாயிகள் பிரதிநிதிகளை சந்திக்காமல் ஓட விட்ட மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த ஒரு மாத காலமாக டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தைச் சார்ந்த விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.
போராடும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை பிரதமரை சந்திப்பதற்கு அழைத்துச் செல்வதாக கூறிய காவல்துறை அதிகாரிகள், பின்னர் மனுக்களை அதிகாரிகளிடத்தில் கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என கூறியிருக்கின்றனர்.
தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்க மறுத்ததால் அவர்கள் நிர்வாணமாக ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகள் பிரதிநிதிகளை சந்திக்காமல் ஓட விட்ட மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்'' என ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT