Published : 22 Feb 2014 12:00 AM
Last Updated : 22 Feb 2014 12:00 AM

கோவை: காங். முன்னாள் அமைச்சர் வீடு மீது கெரசின் நிரப்பிய பாட்டில் வீச்சு

கோவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு வீட்டின் மீது மர்ம நபர்கள் இருவர் வெள்ளிக்கிழமை மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை வீசி வெடிக்கச் செய்தனர்.

கோவை மற்றும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிகளில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பிரபு. மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது அலுவலகத்துடன் இணைந்த வீடு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆட்சியர் பங்களா அருகே உள்ளது.

இவரது வீட்டின் நுழைவுவாயில் முன்பு வெள்ளிக்கிழமை அதிகாலை இரு

சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், துணிகளை பந்து போல் சுருட்டி எரிபொருளால் நனைத்து பாட்டிலில் வைத்து உள்ளே வீசிச் சென்றதாகத் தெரிகிறது.

வீட்டின் வளாகத்தில், திறந்த வெளியில் விழுந்த அந்த வெடிபொருள் தீப்பற்றி எரிந்தது. ஆட்சியர் பங்களாவில் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர் இதை பார்த்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததுடன் எரிந்து கொண்டிருந்த தீயை காங்கிரஸ் அலுவலக பாதுகாவலர் உதவியுடன் அணைத்தார்.

தீப்பற்றிய இடத்தை, மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையிலான போலீஸார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

உடைந்த பாட்டில், எரிந்த நிலையில் துணிகள் ஆகியவை கிடந்தன. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், தடயவியல் சோதனைக்கு எடுத்துச் சென்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் ஏற்பட்ட அதிருப்தியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

வீடியோ பதிவு

எரிபொருள் குண்டு வீசிய இருவர் உருவம், சம்பவ இடத்தில் இருந்த வீடியோவில் பதிவாகியுள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

“மர்ம நபர்கள் துணியைச் சுருட்டி மண்ணெண்ணெய் ஊற்றி பாட்டிலில் வைத்து உள்ளே வீசிச் சென்றுள்ளனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள வீடியோவில் 2 பேர், அந்த நேரத்தில் செல்வது பதிவாகியுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x