

மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சையின் போது, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 23 பேருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பார்வை பாதிக்கப்பட்ட 21 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேசிய கண்ணொளி இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் கண்புரையால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்கும் வகையில் கண்புரை அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 5.5 லட்சம் பேருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. பார்வை இழப்பை, குறிப்பாக கண்புரையால் ஏற்படும் பார்வை இழப்பை தடுப்பதில் தமிழகம் முன்னிலை மாநிலமாக உள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 1.96 லட்சம் பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் பார்வையை முழுமையாகப் பெற்று நலமாக உள்ளனர். ஏழை எளியோருக்கு, எவ்வித கட்டணமும் இன்றி, அரசு மருத்துவமனைகளில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் சராசரியாக ஆண்டு தோறும் 928 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது. இந்நிலையில், மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் சிலருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த நாட்களில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 23 பேருக்கும் சேலம், கோயம்புத்தூர் அரவிந்த் கண் மருத்துவமனை, சேலம் அகர்வால் கண் மருத்துவமனை, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அமைச்சர்கள் நடவடிக்கை
அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிலருக்கு தொற்று ஏற் பட்டதை அறிந்தவுடன், உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அமைச்சர்களுக்கு தமிழக முதல் வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்பேரில், பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து அவர்களுக்கு உயர் சிகிச்சைகள் அளிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 23 பேரில், சிகிச்சைக்குப் பிறகு 2 பேருக்கு பார்வை திரும்பக் கிடைத் துள்ளது. 17 பேருக்கு தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கண் சிறப்பு மருத்து வர்களின் கருத்துப்படி, பார்வை திரும்பக் கிடைப்பது குறித்து 3 மாதங்களுக்கு பிறகே தெரிய வரும். 4 பேருக்கு இன்னும் தொற்று முழுவதுமாக நீங்கவில்லை என் பதால் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரூ.1,000 ஓய்வூதியம்
மேட்டூர் அரசு மருத்துவ மனையில் கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தொற்று பாதிப்பு ஏற்பட்ட 23 பேருக்கும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், பார்வை பாதிக்கப்பட்ட 21 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 23 பேரில், 2 பேருக்கு பார்வை திரும்பக் கிடைத்துள்ளது. 17 பேருக்கு தொற்று கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.