Published : 30 Jan 2014 10:01 PM
Last Updated : 30 Jan 2014 10:01 PM

புதிய கொள்கையோ, திட்டமோ இல்லை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து

தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆளுநர் உரை இருக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வில்லை. கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர் களுக்கு லிட்டருக்கு ரூ.10 உயர்த்திக் கொடுக்க வேண்டும். பொது மக்களுக்கு தேவையான சுகாதாரம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. மின்வெட்டால் தொழிற் சாலைகள் இயங்க வில்லை. தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வேலைவாய்ப்பை அளிக்க வில்லை என்று கூறி தமிழகம் முழுக்க பல்வேறு தரப்பினரால் மறியல், ஆர்ப்பாட்டம், உண்ணா விரதம் போன்ற போராட்டங்கள் நடந்து வருகின்றன.

கோமாரி நோயால் இறந்த மாடுகளுக்கு கர்நாடக மாநிலம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு அளித்ததைப் போல தமிழக அரசும் அளிக்கும் என்ற குறைந்தபட்ச எதிர்பார்ப்பைக்கூட ஆளுநர் உரை பூர்த்தி செய்யாதது வருத்தத்துக்குரிய ஒன்றாகும். தொடர் மின்வெட்டால் விவசாயம் நசிந்துவிட்டது. நெசவுத் தொழில் முடங்கிப்போய் விட்டது. சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லை. ஆனால், சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதாக ஆளுநர் உரையில் சொல்லப்பட்டுள்ளது.

இது ஆளுநர் உரையாகத் தெரியவில்லை. அதிமுக கட்சி எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர் களும் முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி புகழ்பாடும் உரையாகத்தான் தெரிகிறது. மொத்தத்தில் ஆளுநர் உரையில் நடுத்தர, ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் புதிய கொள்கைகளோ, திட்டங்களோ இல்லை” என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x