Published : 18 Aug 2016 07:51 AM
Last Updated : 18 Aug 2016 07:51 AM

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி குடமுழுக்கு விழா: வரும் 22-ம் தேதி நடக்கிறது

திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி கோயிலில் உள்ள அருள்மிகு ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி சன்னதிக்கு வரும் 22-ம் தேதி குடமுழுக்கு நடக்க உள்ளது. தரிசிக்க வரும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இது தொடர்பாக அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் செயல் அலுவலர் மு.ஜோதிலட்சுமி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயிலில் உள்ள ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி, ஸ்ரீ கஜேந்திர சுவாமி, ஸ்ரீதிருமழிசையாழ்வார், குளக்கரை ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமி சன்னிதிகளுக்கு குடமுழுக்கு செய்வதென்று முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் முதல்வரின் உத்தரவுப்படி கடந்தாண்டு தொடங்கப்பட்டன. ரூ.95 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட குடமுழுக்குப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், 4 சன்னிதிகளுக்கான கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி திங்கள் கிழமை காலை 9.30 மணியிலிருந்து 10.25 மணிக்குள் நடக்க உள்ளன. மேலும், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 18-ம் தேதி முதல் யாகசாலைகள் அமைக்கப்படவுள்ளன. அன்றைய தினம் முதல்கால ஹோமம், திவ்யபிரபந்த சேவை, வேதபாராயணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்க உள்ளன.

இதேபோல், வரும் 19-ம் தேதியன்று விஸ்வரூபம், கும்பாராதனம், காலசந்தி, பூர்ணாஹுதி, சாற்றுமுறை, விமான கலசம் ஸ்தாபனம், ஹோமம் உள்ளிட்டவையும், 20-ம் தேதியன்று ஹோமம், மூலவருக்கு சொர்ணபந்தனமும் (தங்கத்தில்), ரஜதபந்தனமும் (வெள்ளியில்) சாத்தப்படவுள்ளன. 21-ம் தேதியன்று ஹோமம், மஹாசாந்தி ஜப்யம், அதிவாச திருமஞ்சனம், மஹாசாந்தி திருமஞ்சனம், உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்க உள்ளன.

இதையடுத்து, 22-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூபம், கும்பாராதனம், காலசந்தி உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கிறது. காலை 9 மணிக்கு பெருமாள், கும்பத்துடன் சன்னிதியில் எழுந்தருள உள்ளார். சரியாக காலை 9.30 மணியிலிருந்து 10.25-க்குள் விமானம் மற்றும் கோபுரங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட உள்ளன.

மேலும், அன்றைய தினம் காலை 11.30 முதல் 12.30 மணி வரை மஹா ஆசீர்வாதம், வேத திவ்ய பிரபந்த சாற்றுமுறை, தீர்த்தம், பிரசாதம் விநியோகிக்கப்படும். பக்தர்கள் மதியம் 1 முதல் 2 மணி வரை சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மாலை 4.30 மணிக்கு கஜேந்திரவரதர் புறப்பாடும், இரவு 8 மணிக்கு ஸ்ரீ அழகிய சிங்கர் பெரிய சேஷ வாகன புறப்பாட்டு நிகழ்வும் நடக்கவுள்ளன.

குடமுழுக்கினை முன்னிட்டு பக்தர்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படவுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைக்காக மாட வீதிகள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. காவல்துறையினர் ஏராளமான அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏற்ப வசதிகள் செய்யப்படும். குடமுழுக்கினை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளது.

இவ்வாறு செயல் அலுவலர் மு.ஜோதிலட்சுமி கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x