Last Updated : 25 Nov, 2013 09:30 AM

 

Published : 25 Nov 2013 09:30 AM
Last Updated : 25 Nov 2013 09:30 AM

சென்னை: அறுவை சிகிச்சையை மாற்றி செய்ததால் இறந்துவிட்டதாக கூறி உறவினர்கள் புகார்

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சையை மாற்றி செய்ததால் ஏழுமலை என்பவர் இறந்துவிட்டதாக கூறி உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

எழும்பூர் டாக்டர் சந்தோஷ் நகரை சேர்ந்தவர் ஏழுமலை (47). தனியார் நிறுவனத்தின் பணியாற்றி வந்தார். கடந்த 17-ம் தேதி மாலை ஏழுமலை திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை நரம்பியல் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஊசி அன்று இரவே அவருக்கு போடப்பட்டது. அதன்பின், 18-ம் தேதி மற்றும் 19-ம் தேதி எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் அவருடைய மூளையில் ரத்தம் உறைந்து இருப்பது தெரிந்தது. 20-ம் தேதி மீண்டும் சிடி ஸ்கேன் எடுத்ததில், அவருடைய மூளை பகுதி வீங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அன்று மாலையே அவருடைய தலையில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் 4-வது முறையாக 21ம் தேதி எடுத்த சிடி ஸ்கேன் எடுத்து பார்த்த டாக்டர்கள், அவருடைய உடல்நிலையில் சற்று முன்னேற்றம் தெரிவதாக கூறினர்.

இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு ஏழுமலை திடீரென்று இறந்து விட்டார். பின்னர் ஏழுமலைக்கு எடுக்கப்பட்ட 4 சிடி ஸ்கேன் படங்களை உறவினர்கள் பார்த்த னர். அதில் 3-வதாக எடுக்கப்பட்ட ஸ்கேனில் ஏழுமலை வயது 17 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து, “17 வயது சிறுவனுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை, 47 வயதுக்காரருக்கு செய்துவிட்டனர். டாக்டர்கள் செய்த தவறான அறுவை சிகிச்சையால் ஏழுமலை இறந்துவிட்டார்” என கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். அதன்பின், மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் டாக்டர்கள் மீது உறவினர்கள் புகார் கொடுத்த னர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், ஞாயிற்றுக் கிழமை மாலை மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப் பட்டது இறந்தவரின் உடல் திங்கள் கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. அதை வீடியோ வில் பதிவு செய்ய மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக இறந்தவரின் தம்பி அம்பேத் வெங்கடேஷ் கூறியதாவது:

இந்த நரம்பியல் கட்டிடத்தில் ஏற்கெனவே 47 வயதுடைய ஏழுமலை மற்றும் 17 வயதில் ஏழுமலை என 2 பேர் சிகிச்சை பெற்றனர். 3-வதாக என்னுடைய தம்பி ஏழுமலை (47) சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 17 வயது சிறுவனுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை, 47 வயதான என்னுடைய தம்பிக்கு செய்துவிட்டனர். அதனால், என்னுடைய தம்பி இறந்துவிட்டார். அதற்கான ஸ்கேன் ஆதாரம் எங்களிடம் உள்ளது என்றார்.

இது தொடர்பாக நரம்பியல் பிரிவில் இருந்த டாக்டர்கள் கூறியதாவது: நரம்பியல் பிரிவில் ஏழுமலை சிகிச்சைக்காக சேர்ந்த போதும், அதற்கு வேறு யாரும் ஏழுமலை என்ற பெயரில் சிகிச்சை பெறவில்லை. இவர் மட்டும்தான் ஏழுமலை என்ற பெயரில் சிகிச்சை பெற்று வந்தார். ஸ்கேனில் வயதை டைப் செய்யும்போது தவறுதலாக 47-க்கு பதில் 17 என டைப் செய்யப்பட்டு இருக்கலாம். மற்றபடி ஸ்கேன் மாறுவதற்கு வாய்ப்பில்லை. அறுவை சிகிச்சையையும் மாற்றி செய்யவிwல்லை என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x