Published : 04 Apr 2014 09:30 AM
Last Updated : 04 Apr 2014 09:30 AM

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் சில சொத்துகளை முடக்க பிறப்பித்த உத்தரவு ரத்து

முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் சில சொத்துகளை முடக்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சில சொத்துகளை முடக்குமாறு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2000-ம் ஆண்டில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, ஜெ.இளவரசி மற்றும் இளவரசியின் மகன் விவேக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன், சிறப்பு நீதிமன்ற உத்தரவு செல்லாது என கூறி, அதனை ரத்து செய்து புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளார்.

ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் உள்பட 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சொத்துகளை முடக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்கள் தரப்பு கருத்துகளையும் கேட்டு, அதன் பிறகே சொத்துகள் முடக்கம் தொடர்பாக உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். இவ்வாறு உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இந்த விவகாரம் தற்போது பெங்களூரில் செயல்பட்டு வரும் சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்பப்படுகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் வழக்கில் சேர்த்து, அவர்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பின் சட்டப்படி இந்த வழக்கில் உரிய உத்தரவை சிறப்பு நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x