Last Updated : 26 Aug, 2016 01:43 PM

 

Published : 26 Aug 2016 01:43 PM
Last Updated : 26 Aug 2016 01:43 PM

மதுரையில் படித்த இளைஞர்களை குறிவைக்கும் ரவுடி கும்பல்: போதைக்கு அடிமையாக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுத்தும் அவலம்

மதுரையில் கஞ்சா, மதுபானம் போன்ற வஸ்துகளை படித்த இளைஞர்களுக்கு தொடர்ந்து சப்ளை செய்து, போதை பழக்கத்துக்கு அடிமையாக்கி அவர்களை குற்றச் செயல்களில் ரவுடி கும்பல்கள் ஈடுபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் மதுரை நகரில் வாழைத்தோப்பு, செல்லூர், ஆரப்பாளையம் கண்மாய்க் கரை, வண்டியூர், யாகப்பா நகர், காமராஜர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான கஞ்சா வழக்குகள் பதிவாகின. இதனால் குற்றச் செயல்களும் அதிகரித்து வந்தன. அதன்பின், காவல்துறையினர் எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் கஞ்சா விற்பனை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் ஆரப்பாளையம், வண்டியூர், யாகப்பாநகர் உள்ளிட்ட சில இடங்களில் இன்னும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. யாகப்பா நகரில் கஞ்சா விற்பனையில் இரு கோஷ்டிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இக்கோஷ்டி யினருக்குள் அடிக்கடி ஏற்பட்ட மோதலில், கடந்த ஓராண்டில் மட்டும் செந்தில் என்பவர் தரப்பில் அவரது சகோதரர் உட்பட 4 பேரும், உதயா என்பவர் தரப்பில் மூவரும் பழிக்குப் பழியாக கொல்லப்பட்டுள்ளனர்.

தனிப்படை விசாரணையில் உதயா கோஷ் டியில் டிப்ளமோ, முதுகலை பட்டதாரிகள், அரசு அலுவலர்களின் பிள்ளைகள் இருந்தது தெரி யவந்ததால் போலீஸார் அதிர் ச்சி அடைந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர் சிலர் கூறியதாவது: வறட்சியான கிராமப் பகுதிகளில் இருந்து பிழைப்புக்காக மதுரைக்கு வந்தோம். பிள்ளைகளை படிக்க வைத்து நல்ல நிலைக்கு ஆளாக்கலாம் என கனவு கண்டோம். ஆனால், ரவுடிகள் எங்கள் பிள்ளைகளை மது, கஞ்சாவுக்கு அடிமையாக்கி குற்றச் செயல்களில் தள்ளி இருப்பது வேதனை அளிக்கிறது. போலீஸார் இக்கும்பல்களை தீவிரமாக கண்டறிந்து ஒடுக்க வேண்டும். இல்லாவிட்டால், ஏராளமான படித்த வேலையில்லாத இளைஞர்கள் இக்கும்பல்களின் பிடியில் சிக்கி சமூக விரோதிகளாகும் அபாயம் உள்ளது என்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: பிற நகரங்களை விட, மதுரையில் புனைப் பெயர்களை கொண்ட ரவுடி, குற்றவாளிகள் அதிகம். நாங்களும் அடையாளத்துக்காக சிலருக்கு பெயர் வைப்போம். மதுரையைச் சேர்ந்த ரவுடிகள் சிலர், தங்களது கோஷ்டிகளை பலப்படுத்த படித்த இளைஞர்களை குறி வைக்கின்றனர். கபடி, கிரிக்கெட், ஊர், தெரு விழாக்களில் படித்தவர்களை சந்தி த்து அவர்களுடன் நெருங்கும் ரவுடிகள், ஏதாவது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் செய்கின்றனர். முதலில் சிகரெட், மதுப் பழக்கத்தில் அவர்களை ஈடுபடுத்துகின்றனர். பின்னர் கஞ்சாவை தொடர்ந்து வழங்கி அடிமையாக்குகின்றனர். அதன் பின் அந்த இளைஞர்களை பின்னால் இருந்து இயக்கி, சமூக விரோத செயல்களில் ஈடுபடச் செய்கின்றனர். அவர்கள் ஏதாவது குற்ற வழக்கில் சிக்கி, சிறை தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வரும்போது, ‘ஹீரோயிசம்’மேலோங்குகிறது.

யாகப்பா நகரில் உள்ள ஒரு கோஷ்டியில் மட்டும், இதுபோன்ற 50-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. டிப்ளமோ, டிகிரி, எம்எஸ்சி, எம்ஏ படித்தவர்கள் 25 சதவீதம் பேர் இக்கோஷ்டியில் உள்ளனர். மதுரையில் பெரும்பாலான வழிப்பறி, திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் சிக்கும் குற்ற வாளிகள் டிகிரி, டிப்ளமோ படித்தவர்களாக இருப்பது அதிர் ச்சி அளிக்கிறது.

விசாரிக்கும்போது, விளை யாட்டாக திருட்டில் ஈடுபட்டோம். சரியான வேலை கிடைக்காததால் வேறு வழியின்றி குற்றச் செயலில் ஈடுபட்டோம் என பல்வேறு காரணங்களை சொல்கின்றனர். படித்தவர்கள் குற்ற வழக்குகளில் சிக்கும்போது, அவர்களின் எதிர்காலம் பாழாகும் என்றாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுபோன்று படித்த இளைஞர்களுக்கு வலைவிரிக்கும் ரவுடி கும்பல்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த விவகாரத்தில் பெற்றோருக்கும் பொறுப்பு உள்ளது. படிப்பை முடித்தவுடன் ஊர் சுற்ற விடாமல் பிள்ளைகளுக்கு உடனடியாக ஒரு வேலையைத் தேடி கொடுக்க வேண்டும். கிடைக்காத பட்சத்தில், சுயதொழில் தொடங்க வழிகாட்டினால் தவறான வழியில் செல்வதை தடுக்கலாம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x