Published : 04 Feb 2014 12:00 AM
Last Updated : 04 Feb 2014 12:00 AM
ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
எனவே, இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முழு மதிப்பெண் 150. இதில் இதில் 55 சதவீதம் என்பது 82.5 மதிப்பெண்களாகும். தகுதித் தேர்வை பொருத்தவரையில், ஒரு கேள்விக்கு 1 மதிப்பெண் வழங்கப்படுகிறது.
அரை மதிப்பெண் என்று எதுவும் கிடையாது. 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில், 150-க்கு 82.5 மதிப்பெண் எடுத்திருந்தால் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும். தேர்வில் அரை மதிப்பெண் இல்லாததால் தேர்ச்சி மதிப்பெண்ணை கணக்கிடுவது சிரமமாக இருக்கும்.
எனவே, தேர்ச்சி மதிப்பெண் 83 ஆக உயர்த்தப்படுமா அல்லது 82 மார்க் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 83 அல்லது 82 என்பதை அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும். இதுகுறித்த விவரங்களை அரசு வெளியிட உள்ள ஆணையில் எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.
சி.பி.எஸ்.இ., கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளுக்கான தகுதித் தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது.
இதில் எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.), மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 55 சதவீத மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.
‘‘மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் (சி.டெட்) இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதம் என்பது 82 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 82 மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படுகிறது’’ என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 12,596 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 14,496 பேரும் 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். பணிநிய
மனத்துக்காக அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.
தற்போது இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் குறைக்கப்பட்டு இருப்பதால் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களுக்கு தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றுவந்தவர்கள், தற்போதைய அறிவிப்பால், பணி நியமனம் தாமதம் ஆகுமோ என்ற கவலையில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT