Published : 27 Jul 2016 08:53 AM
Last Updated : 27 Jul 2016 08:53 AM
தானமாக பெறப்படும் ரத்தத்தை ‘நாட்’ பரிசோதனை செய்வது அவசியம். இதனால், ரத்ததத்தின் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவுவதை தடுக்க முடியும் என்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
நோயாளிகளுக்கு ‘நாட்’ பரிசோதனை செய்யப்பட்ட ரத்தம் ஏற்றப்படுவது குறித்த கருத்த ரங்கம் ரோச் பரிசோதனை நிறுவனம் மற்றும் அப்போலோ மருத்துவமனை சார்பில் சென்னை யில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ரோச் பரிசோதனை நிறு வனத்தின் மருத்துவ விவகாரங்கள் துறைத் தலைவர் டாக்டர் சந்தீப் சேவ்லிகர் பேசியதாவது:
இந்தியாவில் 30 லட்சம் யூனிட் ரத்தம் பற்றாக்குறையாக உள்ளது. தானமாகப் பெறப்படும் ரத்தம், தேவைப்படும் நோயாளிகளுக்கு ஏற்றப்படுகிறது. ரத்த தானம் செய்தவருக்கு ஏதாவது நோய் இருந்தால், ரத்தம் ஏற்றப்படும் நோயாளிக்கும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க ‘நியூக்ளிக் ஆசிட் டெஸ்ட்’ (நாட்) என்ற தொழில்நுட்பத்தை கொண்டு வந்துள்ளோம். இதன்மூலம் பரிசோதனை செய்யும்போது ரத்தத்தில் நோய்க் கிருமிகள் இருந்தால் தெரிந்துவிடும். அந்த ரத்தத்தை நோயாளிகளுக்கு ஏற்றுவதை தடுத்துவிடலாம். ரத்தம் மூலம் நோய் பரவுவது தடுக்கப் படும். எனவே, நோயாளிகளுக்கு செலுத்தும் முன்பு ரத்தத்தில் ‘நாட்’ பரிசோதனை மேற்கொள்வது அவசியம். இதுகுறித்து பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பல நாடுகளில் ‘நாட்’ மூலம் பரிசோதனை செய்யப்பட்ட ரத்தம் மட்டுமே நோயாளிகளுக்கு ஏற்றப்படுகிறது. சென்னையில் அப்போலோ மருத்துவமனை உட்பட 25 நகரங்களில் ‘நாட்’ மூலம் பரிசோதனை செய்யப்பட்ட ரத்தம் நோயாளிகளுக்கு ஏற்றப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை அப்போலோ மருத்துவமனை ரத்த வங்கித் தலைவர் ரெமா மேனன் பேசும் போது, ‘‘ரத்தம் முக்கியமானது. அப்போலோ மருத்துவமனை ரத்த வங்கியில் ‘நாட்’ தொழில்நுட்பம் கடந்த 2010-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு ‘நாட்’ பரிசோதனை செய்யப்பட்ட ரத்தம் மட்டுமே நோயாளிகளுக்கு ஏற்றப்படுகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT