தொழில்நுட்பம் பறக்கும் காலத்தில் சைக்கிளில் போலீஸ் ரோந்தா?- கருணாநிதி விமர்சனம்

தொழில்நுட்பம் பறக்கும் காலத்தில் சைக்கிளில் போலீஸ் ரோந்தா?- கருணாநிதி விமர்சனம்
Updated on
1 min read

காவல் துறையினர் சைக்கிளிலே சென்று குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது என்பது தொழில்நுட்பம் இறக்கை கட்டிப் பறக்கும் இந்தக் காலத்திற்குப் பொருந்தி வராத திட்டம் என திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி தனது அறிக்கையில், "முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைமைச் செயலகத்திற்கு வருவதும், காவல் துறையினர் ரோந்து செல்ல சைக்கிள்களை வழங்குவது போன்ற பணியிலே ஈடுபட்டுள்ளார்.

காவல் துறையினர் சைக்கிளிலே சென்று குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது என்பது தொழில்நுட்பம் இறக்கை கட்டிப் பறக்கும் இந்தக் காலத்திற்குப் பொருந்தி வருமா என்று கூடச் சிறிதும் எண்ணிப் பார்க்காமல், "கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும்" காரியத்திலே ஈடுபட்டுள்ளார்கள்.

ஜெயலலிதாவின் பொறுப்பிலே உள்ள காவல் துறையில் உள்ள தலைமைக் காவலர் ஒருவர் வழக்கு விசாரணையை பதிவு செய்யவே செல்போன் வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு மீறல்கள் குறித்துத்தான் அதிமுக அரசு அக்கறையற்ற தன்மையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in