Published : 21 Nov 2014 09:32 AM
Last Updated : 21 Nov 2014 09:32 AM

திமுக கூட்டணி இல்லை என சூசகம்: திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாமக ஆட்சி அமைக்கும்

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆட்சியை அமைக்க பாமகவினால் மட்டுமே முடியும் என கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமகவின் தலைமை சிறப்பு செயற்குழு கூட்டம் சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் நேற்று நடந்தது. இதில், கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அன்புமணி ராமதாஸ் எம்.பி., ஏ.கே.மூர்த்தி, குரு எம்எல்ஏ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பேசிய நிர்வாகிகள் தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று அணியை உருவாக்க வேண்டுமென பேசினார்.

அன்புமணி ராமதாஸ் எம்.பி பேசுகையில், ‘‘உங்களின் கருத்து களைதான் டாக்டர் ராமதாஸ் சொல்லி வருகிறார். கடந்த 1998 முதல் 2014 வரையில் மாறி, மாறி கூட்டணி வைத்தது தவறுதான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது ஊழல், திமுக மீது 2ஜி என ஊழல் நிறைந்த கட்சிகளாகி விட்ட நிலையில், மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த நிலை, மக்கள் மத்தியில் தற்போது உருவாகியுள்ளது. 3-வது அணி யல்ல, மாற்று அணியாக அமைய நல்ல வாய்ப்புள்ளது’’ என்றார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மீது அதிகமான ஊழல் குற்றச் சாட்டுகள் உள்ளன. ஆனால், இதை வெளியில் கொண்டு வருவ தில் பத்திரிகைகள் தொடர்ந்து மவுன மாகவே உள்ளன. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது. சிஎம்டிஏவில் அனுமதி பெற வேண்டுமென்றால் ஒரு சதுர அடிக்கு ரூ.60 முதல் ரூ.70 வரை லஞ்சம் கேட்கிறார்கள். இதனால், கட்டுமான நிறுவனங்கள் ஓடுகின்றன. தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சியாக ஆட்சி அமைக்க பாமகவினால் மட்டுமே முடியும். மாற்று அணியை தொடர்ந்து வலுப்படுத்தும் வகையில் நீங்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பாமகவின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெறும். கூட்டத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்து பேசுகிறார்.

சமீபத்தில் ராமதாஸ் பேத்தி திருமண விழாவில் திமுக தலைவர் கருணாநிதியும் ஸ்டாலினும் கலந்து கொண்டனர். இதனால், திமுகவு டன் பாமக கூட்டணி அமையும் என்று கருதப்பட்ட நிலையில் ராமதாசின் பேச்சு திமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை சூசகமாக உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x