Published : 19 Mar 2017 09:27 AM
Last Updated : 19 Mar 2017 09:27 AM

எங்கும் நிற்காமல் பல ஆயிரம் கி.மீ. தொலைவு பறக்கும் சாதனை பறவை: ‘கருவால் மூக்கான்’ கிளியூர் குளத்துக்கு வலசை வருகை

ஒரே மூச்சில் எங்கும் நிற்காமல் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவுக்கு பறக்கும் கருவால் மூக்கான் பறவை திருச்சி அருகே கிளியூர் கிராமத்தில் உள்ள குளத்துக்கு வலசை (இடப்பெயர்ச்சி) வந்துள்ளது.

கருவால் மூக்கான் (BLACK TAILED GODWIT) என்ற நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இந்த பறவையினம் புவியின் வடபகுதியில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து வாழ்கிறது. இவை ஆண்டுதோறும் குளிர்காலத் தில் தென்பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றன. நெடுந் தொலைவு பறக்கும் இந்த வகைப் பறவை களை (GODWIT) தமிழகத்தில் மூக்கான்கள் என்று அழைக்கிறோம். இந்த பறவையின் மூக்கு (அலகு) நீளமாக இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

புறாவை விட சற்று பெரிய அளவில் இருக்கும் இந்த வகைப் பறவையின் ஆற்றல் வியப்பானது. நீண்ட அலகையும், நீண்ட கால்களையும் கொண்டுள்ள உள்ளான் இனத்தைச் சேர்ந்த பார் டெய்ல்டு காட்விட் (BAR TAILED GODWIT), பிளாக் டெய்ல்டு காட்விட் (BLACK TAILED GODWIT) ஆகிய பறவைகள் குளிர்காலத்தில் தமிழகத்துக்கு வலசை வருகின்றன.

தமிழகத்தில் கடற்கரையோரங் களில் பெரும்பாலும் அதிக அளவில் காணப்படும் இந்த பறவைகள் சில நேரங்களில் உட்பிரதேசங்களில் உள்ள நீர்நிலைகளுக்கும் வருகின்றன. தற்போது கருவால் மூக்கான் பறவைகள் திருச்சி, திருவெறும்பூர் அருகில் உள்ள கிளியூர் குளத்துக்கு வந்துள்ளன.

இந்த பறவைகளை ஆய்வு செய்த திருச்சியைச் சேர்ந்த பறவையியலாளர் பாலா பாரதி கூறியதாவது:

ஆய்வுக்காக தற்போது, பற வைகளின் உடலில் மிக நுண்ணிய மின் அலை பரப்பி (மைக்ரோ சிப்) பொருத்தப்படுகிறது. அதிலிருந்து எழும் மின் அலைகள் மூலம் அந்த பறவை இருக்கும் இடம், பறக்கும் உயரம், பறக்கும் வேகம் உள்ளிட்ட தகவல்கள் துல்லியமாக அறியப்படுகின்றன.

அந்தவகையில், 2007-ம் ஆண்டு பெண் பட்டை வால் மூக்கான் பறவை ஒன்று (female Bar-Tailed Godwit ) தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் உடலில் சிறிய ரேடியோ மின் அலைபரப்பி பொருத்தப்பட்டது. E7 என பெயரிடப்பட்ட அந்த பறவையின் இடப்பெயர்ச்சி கண்காணிக்கப்பட்டது.

8 நாட்கள் தொடர் பயணம்

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள மிராண்டா என்னும் இடத்தில் இருந்து 2007 மார்ச் 17-ம் தேதி புறப்பட்ட இந்த சிறிய பறவை இரைக்காகவோ, தண்ணீருக்காகவோ எங்கும் தரையிறங்காமல் 8 நாட்கள் பறந்து 10,200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘யாலு ஜியாங்’ என்ற இடத்தை அடைந்தது.

பின்னர், 5 வார ஓய்வுக்குப் பின் அங்கிருந்து கிளம்பி 5 நாட்களில் 7,400 கிலோ மீட்டர் தூரம் பறந்து இனப்பெருக்கம் செய்யும் இடமான மேற்கு அலாஸ்காவின் யூகான்-குஷாக்வின் முகத்துவார பிரதேசத்தை அடைந்தது. பின்னர், 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஆகஸ்ட் 30-ம் புறப்பட்டு வேறு பாதையில் 11,600 கிலோ மீட்டர் தூரம் ஒரே மூச்சில் பறந்து எட்டரை நாட்களில் தான் கிளம்பிய இடமான நியூசிலாந்தின் மிராண்டா பகுதியை அடைந்தது.

இந்த சிறு பறவை ஏறத்தாழ 6 மாதங்களில் 29,200 கி.மீ பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வகைப் பறவைகள் இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளுக்கும் ஆயிரத் துக்கும் மேற்பட்ட பறவைகள் குழுக்களாக வலசை சென்று வருகின்றன.

சாதனை பறவை

இந்த கருவால் மூக்கான் பறவைகளை நாகை மாவட்டம் கோடியக்கரை கடற்கரைப் பகுதியில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஆயிரக்கணக்கில் காணலாம். ஒரே மூச்சில் பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவு பறந்து வலசை வரும் இந்த கருவால் மூக்கான் பறவையை சாதனை பறவை எனலாம் என்றார்.

பாலா பாரதி

திருச்சி திருவெறும்பூர் அருகே கிளியூர் குளத்தில் காணப்பட்ட கருவால் மூக்கான் பறவை.

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள மிராண்டா என்னும் இடத்தில் இருந்து 2007 மார்ச் 17-ம் தேதி புறப்பட்ட இந்த சிறிய பறவை இரைக்காகவோ, தண்ணீருக்காகவோ எங்கும் தரையிறங்காமல் 8 நாட்கள் பறந்து 10,200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘யாலு ஜியாங்’ என்ற இடத்தை அடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x