Published : 07 Jan 2014 12:00 AM
Last Updated : 07 Jan 2014 12:00 AM

ஒருபுறம் கொண்டாட்டம்; மறுபுறம் போராட்டம்- சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் பரபரப்பு

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை தமிழக அரசு நிர்வகிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு காரணமாக திங்கள்கிழமை சிதம்பரம் நகரில் பரபரப்பு நிலவியது.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக் குறித்து தகவல் கிடைத்ததும் சிதம்பரம் மாடவீதியில் வசிக்கும் தீட்சிதர்கள் கோயில் வாயில் முன் பட்டாசு வெடித்தும், கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதேநேரத்தில் மேலவீதி பெரியார்சிலை அருகே திரண்ட மனித உரிமை பாதுகாப்பு மையம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி, புரட்சிகர மாணவர் முன்னனி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும், தமிழக அரசு தீட்சிதர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறி மேலவீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த சிதம்பரம் நகர போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 52 பேர்களை கைது செய்தனர்.

தொல்.திருமாவளவன் எம்.பி.:

சிதம்பரம் நடராஜர் ஆலய வழக்கு விசாரணையில் தமிழக அரசு மெத்தனப் போக்குடனும், தீட்சிதர்களுக்கு மறைமுக ஆதரவாகவும், நடந்து கொண்டுள்ளது.வழக்குத் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் போதுமான கால அவகாசம் கொடுத்தும் தமிழக அரசு அதை பொருட்படுத்தவில்லை. எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும். உடனடி யாக அவசரச் சட்டம் இயற்றி கோயில் நிர்வாகத்தை இந்து சமய அறநிலைய நிர்வாகத்தின் கீழ் தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்றார்.

கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ.:

பாரம்பரியமிக்க கோயிலை அரசு நிர்வகிப்பது தான் பொருத்தமாக இருக்கும். ஆனால் உச்சநீதிமன்றம் எதன் அடிப்படை யில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது என்பது புரியவில்லை. தீட்சிதர்கள் நீ்ண்டகாலம் இக்கோயிலை பராமரித்து வந்துள்ளனர். ஆனால் அரசு நிர்வாகத்தின் கீழ் கோயில் வந்த பின் அவர்களது வழிபாட்டு முறையிலோ, அவர்களது வாழ்வாதாரமோ பாதிக்கப்படவில்லை. இந்நிலையில் கோயில் வருமானம் தற்போது ரூ.ஒன்றரை கோடி வரை கிடைத்துள்ளது. இதற்கு முன் இதுபோன்று வருமானம் கிடைத்திருக்கும். அது என்னவானது என்பது தெரியவில்லை. இனிவரும் காலங்களில் கிடைக்கக் கூடிய வருமானமும், பக்தர்களின் காணிக்கையும் என்னவாகும் என்பதற்கு விடையில்லை.

நடராஜர் கோயிலுக்குள் வைணவக் கோயிலும் உள்ளது. அங்கு வழிபட வரும் வைணவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்குமா என்பது போன்ற எண்ணற்ற கேள்விகள் உள்ளன. எனவே அரசு நிர்வகிப்பதுதான் சாலச்சிறந்தது என்றார் பாலகிருஷ்ணன்.

இதுதான் சிதம்பர ரகசியமா?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறுகையில், தமிழகத்தின் அனைத்துக் கோயில்களும் இந்து சமய அறநிலையத்துறையிடம் உள்ளது. பாரம்பரியமிக்க மதுரை மீனாட்சியம்மன் கோயில், பழனி முருகன் கோயில் உள்ளிட்டவை இந்து சமய அறநிலையத் துறையிடம் உள்ள நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு என்பது புரியவில்லை. இதுதான் சிதம்பர ரகசியமா என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x