Published : 18 Nov 2013 11:40 AM
Last Updated : 18 Nov 2013 11:40 AM

64 கிராம மக்களை ஓரிடத்தில் சந்தித்து ஏற்காடு தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏற்காடு தலைச்சோலை கிராமத்தில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை தீபத் திருவிழாவையொட்டி வந்த 64 கிராம மக்களிடம் தி.மு.க. வேட்பாளர் மாறன் வாக்கு சேகரித்தார்.

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. வேட்பாளர் மாறன் மலைக் கிராமங்களில் வாக்கு சேகரித்தார். இவரு டன் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமி, முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், பொங்கலூர் பழனி சாமி உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் சென்று பிரச்சாரம் செய்தனர்.

பக்தர்களிடம் வாக்கு சேகரிப்பு

ஏற்காடு மலையில் தலைச்சோலை கிராமத்தில் அண்ணாமலையார் கோயில் உள்ளது. மலை உச்சியில் உள்ள இந்த கோயிலில் இருந்து பார்த்தால், திருவண்ணாமலை தீப தரிசனக் காட்சியைப் பார்க்கலாம். இதற்காக ஏற்காட்டில் உள்ள 64 மலைக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தீபத்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்கு வந்திருந்தனர்.

இதையறிந்த தி.மு.க. வேட்பாளர் மாறன் ஆதரவா ளர்களுடன் அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று 64 கிராம மக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். இதுபோல வேலூர் மாவட்டச் செயலாளர் காந்தி, வெள்ளை சீருடை அணிந்த 50 இளைஞர்களுடன் வலசையூர், சின்னனூரில் வாக்கு சேகரித்தார்.

சென்னை மாநகர முன்னாள் மேயர் சுப்பிரமணியன், வெள்ளாளகுண்டம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தி.மு.க. வைச் சேர்ந்த அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஏற்காடு தொகுதியில் முகாமிட்டு, தி.மு.க. வேட்பாளர் மாறனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x