

திருவையாறு தியாகராஜர் ஆரா தனை விழாவில் நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை சேர்ந்திசைத்து நேற்று தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் வாழ்ந்த கர்னாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜரின் சமாதி வளாகத்தில், அவர் மறைந்த புஷ்ய பகுள பஞ்சமி திதியன்று ஆண்டுதோறும் இசை ஆராதனை விழா நடைபெறுகிறது. அதன்படி, 170-ம் ஆண்டு ஆராதனை விழாவை கடந்த 13-ம் தேதி கர்னாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, நாள்தோறும் காலை 9 முதல் இரவு 11 மணி வரை இசைக் கலைஞர்கள் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த் தனைகளை சேர்ந்திசைக்கும் ஆரா தனை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று காலை 7 மணியளவில் திருவையாறு திரு மஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, தியாகராஜர் சிலையுடன் உஞ்சவிருத்தி பஜனை ஊர்வலம் புறப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக தியாகராஜர் சமாதியை காலை 8.30 மணியளவில் ஊர்வலம் வந்தடைந்தது. அங்கு, அவரது உருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
அதேநேரத்தில், மங்கள இசை யும், தொடர்ந்து 9 மணிக்கு பிரபஞ்சம் எஸ்.பாலச்சந்திரன் தலைமையில் புல்லாங்குழல் இசைக் கலைஞர் களின் கீர்த்தனைகளுடன் தியாக ராஜருக்கு இசை ஆராதனை தொடங்கியது. பின்னர், நூற்றுக் கணக்கான இசைக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து நாட்டை, கெளளை, ஆரபி, வராளி, ஆகிய ராகங்களில் அமைந்த பஞ்சரத்ன கீர்த்தனைகளைச் சேர்ந்திசைத்து தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
இதில், சுதா ரகுநாதன், மகதி, ஓ.எஸ்.அருண், பாபநாசம் அசோக் ரமணி, உமையாள்புரம் சிவராமன், கர்நாடகா சகோதரர்கள், பிரியா சகோதரிகள், பின்னி கிருஷ்ண குமார், கடலூர் ஜனனி, சாருமதி ராமச்சந்திரன் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான இசைக் கலைஞர்கள், இசை ஆர்வலர்கள் பங்கேற்று கீர்த்தனைகளைப் பாடி, இசைத் தனர். தியாகபிரம்ம மகோற் சவ சபைத் தலைவர் ஜி.ரங்க சாமி, செயலாளர்கள் அரித் துவாரமங்கலம் கே.பழனிவேலு, முஷ்ணம் வி.ராஜாராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உபன்யாசம், ஹரிகதை
பஞ்சரத்ன கீர்த்தனை நிறைவு பெற்றதும் நாதஸ்வர கச்சேரியும், உபன்யாசமும், ஹரிகதையும் அடுத்தடுத்து நடைபெற்றன. மாலை யில் நாதஸ்வர மற்றும் தவில் இசைக் கலைஞர்கள் சேர்ந்திசைத்த பஞ்சரத்ன மல்லாரியும், இரவு 8 மணிளவில் தியாகராஜர் வீதியுலாவும் நடைபெற்றன. இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் ஆராதனை விழா நிறைவடைந்தது.