Published : 07 Mar 2017 12:09 PM
Last Updated : 07 Mar 2017 12:09 PM

சசிகலா புஷ்பா மீது புகார் அளித்த பெண்ணை ஆஜர்படுத்த கோரிய மனு தள்ளுபடி

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மீது பாலியல் புகார் அளித்த பெண்ணை ஆஜர்படுத்தக் கோரி அவரது சகோதரி தாக்கல் செய்த மனு திரும்ப பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டம், ஆனை க்குடியைச் சேர்ந்த ஜான்சிராணி, உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிரு ப்பதாவது:

நானும், எனது தங்கை பானுமதியும் சசிகலா புஷ்பா எம்.பி. வீட்டில் பணிபுரிந்தோம். பின்னர் வேலையைவிட்டு நின்றுவிட்டோம். சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ஆனந்தராஜ் எங்களை அணுகி, சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மீது பாலியல் புகார் அளிக்க வற்புறுத்தினார். குடும்பப் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு நாங்கள் போலீஸில் புகார் அளித்தோம்.

போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரி க்கின்றனர். இந் நிலையில், சசிகலா புஷ்பாவை அரசியலைவிட்டு வெளியேற்றும் நோக்கத்தில் ஆனந்தராஜ் எங்களை வைத்து புகார் அளிக்க வைத்தது தெரிய வந்தது. இதனால் அந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டாம் என முடிவு செய்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரை திரும்பப் பெறுவதாக தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பானுமதி மனு அளித்தார்.

இதனால் எங்கள் மீது கோபமடைந்த ஆனந்தராஜ் வழக்கை தொடர்ந்து நடத்துமாறு எங்களை மிரட்டினார். பின்னர் அவர் பானுமதியை கடத்திச் சென்றார். இதனால் பானுமதியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நிலுவையில் இருந்த நிலையில் பானுமதி டிஜிபி அலுவலகத்தில், தன் மீது அளித்த புகாரை திரும்பப் பெறுமாறு சசிகலா புஷ்பா மிரட்டி வருவதாகப் புகார் அளித்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்குமாறு திசையன்விளை போலீஸாருக்கு டிஜிபி உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் சசிகலா புஷ்பா மற்றும் அவர் குடும்பத்தினர் மீது திசையன்விளை போலீஸார் ஆள் கடத்தல், போலி ஆவணம் தயாரித்தல் உட்பட பல்வேறு பிரிவு களில் வழக்கு பதிவு செய்தனர்.

இந் நிலையில் ஜான்சிராணி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குடும்பப் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு நாங்கள் போலீஸில் புகார் அளித்தோம். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x